ஸ்வீடனில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிருடன் கல்லறையில் புதைக்கப்பட இளம் சிறுவர்கள்!

ஸ்வீடனில் இரண்டு இளம் சிறுவர்கள் உயிருடன் கல்லறையில் புதைக்கப்படுவதற்கு முன்பு சித்திரவதை செய்யப்பட்டு வன்கொடுமைக்கு இலக்கானதாக வெளியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடனின் சோல்னாவில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றவாளிகள் குறித்த இளம் சிறுவர்களிடம் போதைப்பொருட்களை விற்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் மறுத்தபோது, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு கல்லறைக்குள் கொண்டு செல்லப்பட்டனர் என்று பொலிசார் கூறுகின்றனர். கல்லறைத் தோட்டத்தில் வைத்து அந்த சிறுவர்கள் இருவரும் கொடூர சித்திரவதைக்கு இலக்காகியுள்ளனர். இருவரும் வன்கொடுமைக்கு இலக்கானதாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரின் சரியான வயது வெளியிடப்படவில்லை.

அவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதற்கு முன்னர் தங்கள் ஆடைகளை கழற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே ஞாயிறன்று காலை சுமார் 8.39 மணியளவில் கல்லறைத் தோட்டம் வழியாக சென்ற ஒரு வழிபோக்கர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், அந்த இளம் சிறார்கள் இருவரும் உயிருடன் ஆடை இல்லாமல் பரிதாப நிலையில் இருப்பதைக் கண்டுள்ளனர்.

அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 18 வயது இளைஞரை இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் கைது செய்தனர். தொடர்ந்து கால் மணி நேரத்திற்கு பின்னர் 21 வயது இளைஞர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கடத்தல், கொடூரமான தாக்குதல், கற்பழிப்பு மற்றும் கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை இருவரும் மறுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!