ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனின் பிணை மனு நிராகரிப்பு!

பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பிணை கோரி, அற்புதம்மாள் தொடர்ந்த வழக்குக்கு எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பேரறிவாளனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வழக்கினை விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதிகள், செப்டெம்பர் 8ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவருக்கு 90 நாட்கள் பிணை கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பிணை கேட்டு அற்புதம்மாள் அனுப்பிய மனு நிராகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக சிறைத்துறை விளக்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!