போராட்டத்தையடுத்து மஹிந்த பிறப்பித்த உத்தரவு! உடனடியாக யாழிற்கு விரைந்த இராஜாங்க அமைச்சர்

கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

காலை 10 மணியளவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, சுன்னாகம் தெற்கு கிராம சேவகர் பிவிவுக்குட்பட்ட சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த நலன்புரி நிலையத்தில் 81 குடும்பங்களை சேர்ந்த 259 பேர் வசித்து வருகின்றார்கள்.

1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மயிலிட்டி மற்றும் தையிட்டி பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து 30 வருடங்களாக நலம்புரி நிலையத்தில் வசித்து வருகின்றனர்.

குறித்த நலன்புரி நிலையத்தை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அங்கு வசித்துவரும் மக்களுடைய கருத்துக்களையும் கேட்டுள்ளார்.

இதன்போது தங்களுடைய சொந்த காணிகளில் சென்று வாழ்வதற்கு எற்பாடுகளை செய்து தருமாறு மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய கோரிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கதைத்து விரைவில் நல்லதொரு முடிவினை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொடர்ந்து மயிலிட்டி வடக்கு, கிராமக்கோட்டடியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தையும் இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டிருந்தார்.

ஒரு வீடு பத்து இலட்சம் ரூபா பெறுமதியில் 24 வீடுகள் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இராஜாங்க அமைச்சரின் குறித்த விஜயத்தின் போது நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார்.அத்தோடு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!