சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் கொலை- போலீசார் விசாரணை

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் 2-வது தெருவில் வசிப்பவர் ஓதவந்தான்குடி ஊராட்சி ஒன்றிய அரசுபள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தஜோதி(வயது 52) இவரது மனைவி சித்ரா (49) என்பவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சித்ராவை தலையில் அடித்துள்ளார். இதில் தலை சிதறி சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அருகில் வசித்த பெண் வெளியே வந்து பார்த்தபோது சித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டு சத்தம்போட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஆனந்தஜோதியின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது சித்ரா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கண்ணீர்விட்டு கதறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி டி.எஸ்.பி யுவப்பிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!