மாணவி துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

திருகோணமலை – டொக்கியாட் கடற்படைத் தளத்தில் உள்ள திஸ்ஸ சிங்கள வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற 10 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று (21) தீர்ப்பளித்துள்ளார்.

2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் கடற்படைத் தளத்தில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றிய குற்றவாளி கடும் பாதுகாப்பு நிரம்பிய பாடசாலை வளாகத்திலும், நீச்சல் தடாகத்திலும், திருகோணமலை நீதிமன்ற வீதியிலுள்ள சிறுமியின் வீட்டிலும் சிறுமியை துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக மூன்று குற்றச்சாட்டு அடங்கிய குற்றச்சாட்டுப் பத்திரம் திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் கடந்த 2019 பெப்ரவரி மாதம் 14ம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த சிவில் உத்தியோகத்தர் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிங்கள பாட ஆசிரியராக தன்னை அடையாளப்படுத்தியே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளார். இந்நிலையில் அவரது செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும், குறித்த நஷ்ட ஈட்டை செலுத்த தவறினால் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிவான் தீர்பளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!