பலாங்கொடையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி! விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

பலாங்கொடை – ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கடந்த 26ம் திகதி இறக்குவானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குவானை- படலந்த, உக்குவத்தை பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயாருடன் தகாத உறவில் இருந்துள்ளதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் சுமார் எட்டு மாதங்களாக மாணவியின் தாயாருடன் தொடர்பில் இருந்துள்ளதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மகள் இந்த விடயத்தில் இடையூறாக இருப்பதாகவும், ஆகையினால் மகளை கொலை செய்யுமாறு மாணவியின் தாய் தன்னிடம் கூறியதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துணி துண்டு ஒன்றினால் மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, கடந்த 22ம் திகதி பலாங்கொட பகுதியில் உள்ள வீட்டில் இருந்து குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!