இந்த நாளின்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்: மக்களை எச்சரித்த நிபுணர்கள்!

மராட்டியத்தை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. நாட்டிலேயே மராட்டியத்தில் தான் அதிகமானவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த மாதத்தில் ஒருநாளைக்கு 20 ஆயிரம் பேருக்கு குறையாமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக மராட்டியத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இது மனதிற்கு சற்று ஆறுதல் தருவதாக அமைந்தாலும் நிபுணர்கள் மீண்டும் மராட்டியத்தில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறி வயிற்றில் புளியை கரைத்துள்ளனர்.

இதுகுறித்து கொரோனா வைரசுக்கான மாநில தொழில்நுட்ப குழுவில் அங்கம் வகிக்கும் டாக்டர் சுபாஸ் சாலுகே கூறியதாவது:-

நான் உள்பட பல சுகாதார அதிகாரிகளும் தீபாவளி பண்டிகை முடியும் வரை கொரோனா வைரஸ் பாதிப்பில் எந்த முன்னேற்றமும் அடைந்துவிட்டதாக நம்பவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் மக்கள் அதிக அளவில் வெளியே நடமாடுவார்கள். இதனால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கடந்த சில நாட்களாக நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் கொரோனா உச்சக்கட்ட நிலை முடிந்துவிட்டதாக தப்பு கணக்கு போடக்கூடாது. கொரோனா இரண்டாவது அலையை தற்போது மறந்துவிடுங்கள், முதல் அலையே தீபாவளி வரை நம்மை துரத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஊரடங்கு உத்தரவு தளர்வு காரணமாக நிறுவனங்கள் திறக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “மக்களிடம் வீட்டிலேயே இருக்கும்படி இனிமேல் நாங்கள் கேட்க முடியாது. பல வேலைகள் ஆபத்தில் உள்ளன. பொருளாதாரமும் நகர வேண்டும். ஆனால் நாம் சோதனையை அதிகரிப்பதின் மூலம் தொற்று பரவலை சரிபார்க்க முடியும். இதிலும் சில தொழில்நுட்ப சவால்கள் உள்ளன.

செப்டம்பர் மாதத்தில் நாங்கள் தினமும் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் சோதனைகளை மேற்கொண்டோம். ஆனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் சோதனை எண்ணிக்கை 70 ஆயிரமாக குறைந்துள்ளது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!