யாழில் சமூகத் தொற்றென பதற வேண்டாம் – கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை. எனினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றுவது அவசியம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,

“புங்குடுதீவில் கொரோனா தொற்றென இனங்காணப்பட்ட பெண் பயணித்த பஸ்ஸின் நடத்துனருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் மக்கள் சமூகத்தொற்று என குழப்பமடையத் தேவையில்லை. ஏனெனில் ஏற்கனவே புங்குடுதீவு பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடனேயே அவருடன் பயணித்த அல்லது அவருடன் பழகிய அனைவரையும் நாங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளோம். அவ்வாறு தனிமைப்படுத்தப்படுத்தலில் இருந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளார்கள். எனவே பொதுமக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.” – என்றார்.

இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் க.மகேசனும் “அச்சம் தேவையில்லை. மக்கள் முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியினை பேணி தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!