கல்லீரல் ரூ.60 லட்சம்.. இதயம் ரூ.40 லட்சம்.. சிறுநீரகம் ரூ.10 லட்சம்..: – தமிழகத்தை அச்சுறுத்தும் ஆர்கன் மாஃபியா!

உடலுறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்தச் சாதனையை நிகழ்த்தி ஹாட்ரிக் அடித்திருக்கிறது தமிழகம். விழிப்புஉணர்வு பெருகியிருப்பதுதான் இந்தச் சாதனைக்குக் காரணம் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில், நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ஒரு செய்தி. ‘2017-ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்தவர் களிடமிருந்து பெறப்பட்ட இதயங்களில் 25 சதவிகிதமும், நுரையீரல்களில் 33 சதவிகிதமும் வெளிநாட்டினரே பெற்றிருக்கிறார்கள்’ என்பதுதான் அந்தச் செய்தி. ‘உடல் உறுப்பு தானம் கேட்டு, முறைப்படி பதிவுசெய்து ஆயிரக்கணக் கானோர் காத்திருக்க, விதிகளைமீறி பல வெளிநாட்டினருக்கு உறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் உடல் உறுப்பு தான ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பாலாஜி இந்த முறைகேட்டுக்குத் துணை போயிருக்கிறார்’ என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடல் உறுப்பு மாற்றுக்கான மத்திய அமைப்பும் இது குறித்துக் கவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஏராளமாக இருக்கிறார்கள். அதனால், உடல் உறுப்புகளுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. தேவை இருக்கும் அளவுக்கு உடல் உறுப்புகள் கிடைப்பதில்லை. தமிழக அரசின் உடல் உறுப்பு தான ஆணையத்தில் பதிவுசெய்து வைத்துவிட்டு, காத்திருப்போர் பட்டியலில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். சாதாரண சிக்னலிலேயே முந்திச்செல்ல நினைக்கும் மனோபாவம் கொண்டவர்கள், சிக்கலான இந்த விஷயத்தில் சும்மா இருப்பார்களா? வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் அவர்களில், வசதி இருப்பவர்கள் இதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ‘‘இதைக் காரணமாக வைத்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் சிலரும், அரசின் சுகாதாரத் துறையில் உள்ளவர்களும் கொள்ளை யடிக்கிறார்கள்’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பெண்களின் கிட்னிக்கே மதிப்பு!

தமிழகத்தில் இதற்காக ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது. எந்த மருத்துவமனை யில் யார் மூளைச்சாவு அடைந்தாலும், உடனே அவர்களின் குடும்பத்திடம் பேசி, உறுப்புகளைப் பெற்று, தேவைப்படுவோருக்கு நல்ல விலைக்கு விற்று காசு பார்க்கிறார்கள். பிரபல தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன. அரசு மருத்துவமனையிலும் மேல்நிலை முதல் கீழ்நிலை வரை, ஆட்களை வைத்துக்கொண்டு செயல்படுகிறது இந்த ஆர்கன் மாஃபியா கும்பல். அரசு மருத்துவமனை களில் யாராவது இறந்துவிட்டால் உடனடியாக இந்தக் கும்பலுக்குத் தகவல் பறந்துவிடுகிறது.

இறந்தவர்களின் குடும்பங்களில் லாகவமாகப் பேசி ஏமாற்றுவது ஒருபுறம் என்றால், ஆரோக்கியமாக இருக்கும் ஏழைப் பெண்களிடம் பணத்தாசை காட்டி சட்ட விரோதமாக சிறுநீரகத்தைப் பறித்து வருகிறது இந்தக் கும்பல். சென்னையில் வியாசர்பாடி, பெரியமேடு, சிந்தாதிரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகள்தான் இந்த மாஃபியாக்களின் இலக்கு. இதற்கென ஏராளமான புரோக்கர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்களே இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

குடியிருப்புகளுக்கு நடுவில் வீடு எடுத்துத் தங்கி, ஒவ்வொருவரின் குடும்ப சூழ்நிலைகளையும் நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்கிறார்கள் இந்த புரோக்கர் பெண்கள். குழந்தைகளுக்கு சாக்லேட் தருவது, பெண்களுக்கு பணம் கொடுத்து உதவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அந்தப் பகுதியில் நல்ல மதிப்பைப் பெற்றுவிடுகிறார்கள். தக்க சமயம் பார்த்து, அக்கறையாகப் பேசுவது போல அவர்களிடம் பணத்தாசை காட்டி ஏமாற்றி கிட்னியைச் சட்ட விரோதமாக விற்கவைக்கிறார்கள். வட்டிக்குப் பணம் கொடுத்தவன் காலையில் வீட்டுக்கு வந்து சண்டை போட்டு விட்டுச் சென்றால், மாலையில் அவர்களின் வீட்டில் இருப்பார்கள் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள். பேசியே கரைக்கிறார்கள். உஷாராக இருக்கும் நபர்கள், முன்கூட்டியே பணம் வாங்கிக் கொண்டே கிட்னியை விற்கிறார்கள். சிலருக்கு உறுப்பை எடுத்தபிறகு, ஏற்கெனவே சொன்ன தொகையில் பாதியைக் கொடுத்து மிரட்டி அனுப்புவதும் நடக்கிறது. ‘கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகும் ஆண்களைவிடப் பெண்களின் சிறுநீரகம்தான் ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெண்களை மட்டுமே குறிவைக்கிறது இந்தக் கும்பல்.வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அந்தப் பெண். கணவர் ஆட்டோ டிரைவர். குடி, அடி என்று குடும்பம் எப்போதும் ரணகளமாக இருந்தது. அருகே, புதிதாக குடித்தனம் வந்த 40 வயதுப் பெண்மணி, “வாடகைத்தாயாக வருகிறாயா?” என்று கேட்டார். இவரும் ஒப்புக்கொண்டார். ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்தும் விட்டார். கொஞ்சநாளில் பணம் கரைந்துவிட்டது. அடுத்து கருமுட்டை தானம் கொடுத்தார். பிறகு, ரத்தம்.

‘‘குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க. தாம்பரத்துல இருக்கிற ஒரு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி ரத்தம் எடுத்துப்பாங்க. ஒரு ரஸ்னா பாக்கெட் அளவுக்கு ரத்தம் எடுத்துக்கிட்டு 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பாங்க. ஒருமுறை ரத்தம் கொடுக்கப் போனப்போ, ‘என் பேத்திக்கு கிட்னி வேணும், தர்றியா…’ன்னு ஒரு பாட்டி வந்து கேட்டாங்க. சரி, நமக்கும் செலவுக்காச்சு, ஒரு புள்ளைக்கு உயிர் கொடுத்ததுமாச்சுன்னு ஒப்புக்கிட்டேன். சென்னையில இருக்கிற பெரிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போய் டெஸ்டெல்லாம் செஞ்சாங்க. சென்னையில ஒரு ஆஸ்பத்திரியில ஆபரேஷன் பண்ணி கிட்னியை எடுத்தாங்க…” என்று வெள்ளந்தியாகச் சொல்கிறார் அந்தப் பெண்.

ஆபரேஷன் நாடகம்!

அதிக அளவுக்கு டிமாண்ட் இருப்பது கிட்னிக்குத்தான். உடல் உறுப்பு தான ஆணையத்தில் சிறுநீரக தானம் கேட்டே நிறைய பேர் பதிவு செய்திருக்கின்றனர். எனவே, கிட்னியில்தான் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவுக்குப் பணம் பார்க்கின்றன.

‘‘சென்னைப் புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அது. கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அட்மிட் ஆனவரிடம் உடல் உறுப்பு தான ஆணையத்தில் கிட்னி முன்பதிவு செய்வதற்காக ரூ.4 லட்சம் அட்வான்ஸ் வாங்கினர். இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவருக்கு கிட்னி கிடைக்கவில்லை. அவர் பணத்தைத் திருப்பிக் கேட்டார். பத்து நாள்கள் கழித்து, ‘கிட்னி வந்து விட்டது’ என்று அவரை அழைத்தார்கள். ஆபரேஷன் தியேட்டர் வரை கொண்டு சென்றவர்கள், ‘உங்களுக்காகக் கொண்டு வரப்பட்ட கிட்னி டேமேஜ் ஆகிவிட்டது’ என்று சொல்லி கையை விரித்துவிட்டனர். அவரிடம் ரூ.30 ஆயிரம் வசூலித்துவிட்டு, ‘மீண்டும் கிட்னி கிடைத்ததும் சொல்கிறோம்’ என்று சொல்லி டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். பொதுவாக, ஒரு கிட்னி மருத்துவமனைக்கு வருகிறதென்றால், நான்கு நோயாளிகளை அழைப்பார்கள். நான்கு பேரில் யாருக்குப் பொருந்துகிறதோ, அவருக்கே அது பொருத்தப்படும். இந்த நோயாளி, பணத்தைத் திருப்பிக் கேட்டதால் இதுபோன்ற நாடகம் ஆடியிருக்கின்றனர்’’ என்கிறார், கிட்னி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்துவரும் டெக்னீஷியன் ஒருவர்.

கடத்தப்படும் நோயாளிகள்!

அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்தவர்களை, அப்படியே தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வருவதற்கும் ஆட்கள் உள்ளனர். அரசு மருத்துவமனையில் உள்ள கடைநிலை ஊழியர்கள் தகவல் கொடுத்ததும், மூளைச்சாவு அடைந்தவரின் குடும்பத்தினரிடம் ஒரு புரோக்கரை அனுப்பிப் பேசுவார்கள். பல லட்சம் ரூபாய் கைமாறும். அதன்பின் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுபவர்கள், அங்கே மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படும். அவர்களிடமிருந்து தானம் பெறப்படும் உறுப்புகள், அந்த மருத்துவமனைக்கு முன்னுரிமை அடிப்படையில் தரப்படலாம் என்பதால் இந்த ஏற்பாடு.

‘‘இன்னும் ஒரு மோசடியும் நடக்கிறது. புரோக்கர்கள் கொண்டு வரும் கிட்னியை வாங்கி நோயாளிக்கு பொருத்துவார்கள். இயற்கையாக மரணம் அடைந்த வேறு யாரையாவது ‘மூளைச்சாவு அடைந்தவர்’ என்று கணக்குக் காட்டி, அவரின் கிட்னி உள்ளிட்ட உறுப்புகளை அகற்றிவிட்டு, அவரிடமிருந்து தானம் பெற்றதாகக் கணக்குக் காட்டிவிடுவார்கள். இப்படியான மோசடிகள்தான் இப்போது பெரும்பாலும் நடக்கின்றன’’ என அதிர வைக்கிறார் ஒரு டாக்டர். சிறுநீரகம் ரூ.10 லட்சம், இதயம் ரூ.40 லட்சம், கல்லீரல் ரூ.60 லட்சம் என விலை வைத்து ஆர்கன் மாஃபியாக்களால் சென்னையில் உறுப்புகள் விற்கப்படுகின்றன.

ஆன்லைனில் கிட்னி விற்பனை!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடக்கின்றன. எனவேதான் வெளி நாட்டவர்கள் பலர் சென்னைக்கு வருகின்றனர். சென்னையில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசின் உறுப்பு தான ஆணையத்தையே கைக்குள் போட்டுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து, உடல் உறுப்பு தான ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் அமலோற் பவநாதனிடம் பேசினோம். “உறுப்பு தான முறையை வெளிப்படையாகச் செயல்படுத்தத் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று இடங்களில் கமிட்டிகள் உள்ளன. கிட்னி, இதயம், கல்லீரல் தானம் பெறுவதற்காக பதிவு செய்தவர்களின் பட்டியல் http://www.tnos.org/ இணையதளத்தில் இருக்கிறது. நான் பதவியில் இருந்தவரை, அரசின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் வரிசைப்படிதான் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டன. எந்த அழுத்தங்களுக்கும் இடம்கொடுக்கவில்லை. இப்போது ஆன்லைனில் கூட கிட்னி விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. இதுவும் சட்டவிரோதம்தான். இதையும் அரசு தடுக்க வேண்டும்’’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!