கொழும்பில் பணிபுரிந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் பேருந்தில் பயணித்தவர்களை தத்தமது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குறித்த நபர் மற்றும் அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவர் என நால்வர் என்சிஜி (NCG) என்ற பெயர் கொண்ட டபிள்யூபி என்சி (WP NC) 8760 இலக்க பேருந்தில் கொழும்பிலிருந்து கடந்த 25ம் திகதி இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.
அந்த நால்வரும் மறுநாள் 26ம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து முதலாவது நபர் முச்சக்கர வண்டியில் நல்லூர், பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். ஏனைய மூவரும் முச்சக்கர வண்டியில் வேலணை மற்றும் புங்குடுதீவுக்கு புறப்பட்டுள்ளனர்.
அத்துடன், முதலாவது நபர் யாழ்ப்பாணம் நகரில் இரண்டு தினங்கள் நடமாடியுள்ளார். அத்துடன், வைமன் வீதியில் உள்ள சிகையலங்கரிப்பு நிலையம், கோயில் வீதியில் உள்ள உணவகம் என்பவற்றுக்கும் சென்றுள்ளார். அதனால் சிகையலங்கரிப்பு நிலையம், உணவகம் என்பன மூடப்பட்டுள்ளன. அங்குள்ள பலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முதலாமவர் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில இன்று காலை மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அத்தோடும் மேலும் பல வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பொலிஸார், சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!