ஈழத்தமிழர் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!

பிரபல சீரியல் நடிகர் செல்வரத்தினம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர் நண்பரே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்வரத்தினம் (41). ஈழத்தமிழரான இவர் சிறு வயதிலேயே பெற்றோருடன் தமிழகம் வந்துள்ளார். செல்வரத்தினத்துக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி சீரியலில் செல்வரத்தினம் நடித்து வருகிறார்.

இவரது மனைவி மற்றும் குழந்தைகள் விருதுநகரில் உள்ளனர். செல்வரத்தினம் மட்டும் தனியாக வாடகை வீட்டில் தங்கியபடியே நடித்து வந்தார். செல்வரத்தினம் நண்பர் பெயர் விஜயகுமார் (36). இவரும் இலங்கையைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையில் செல்வரத்தினம், அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் கொலை செய்த நபரைத் தேடி வந்தனர்.

கொலை செய்த நபர் ஆட்டோவில் வந்ததும், அவர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

ஆட்டோவின் பதிவெண்ணை வைத்துத் தேடிய பொலிசார் ஆட்டோ ஓட்டுநர் மூலம் அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.

கொலை செய்யப்பட்ட செல்வரத்தினம், செல்போனில் ஒரு பெண்ணுடன் அடிக்கடி பேசியதைக் கண்டறிந்தனர். அந்த எண்ணை பொலிசார் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் விஜயகுமாரின் மனைவி எனத் தெரியவந்தது.

பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில், கொலை செய்த நபர் செல்வரத்தினத்தின் நண்பர் விஜயகுமார் எனத் தெரியவந்தது. மேலும் விஜயகுமாரின் மனைவிக்கும், செல்வரத்தினத்துக்கும் கூடா நட்பு இருந்ததும், அது தொடர்ந்ததும், அதனால் ஆத்திரத்தில் இருந்த விஜயகுமார் அதைக் கண்டித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்வரத்தினத்தை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார், பின்னர் தீபாவளிக்கு முந்தைய நாள் சென்னைக்கு வந்த விஜயகுமார் நேராக எம்ஜிஆர் நகர் வந்துள்ளார்.

அங்கு நண்பர் செல்வரத்தினத்தை வெளியில் அழைத்து, அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு மீண்டும் விருதுநகர் திரும்பியுள்ளார், இவை அனைத்தையும் விஜயகுமார் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து விஜயகுமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!