மீண்டும் யுத்த வரவுசெலவுத் திட்டம்!

கொரோனா நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்துள்ள சூழலில் சுகாதாரத்துறைக்கு பதிலாக பாதுகாப்புத்துறைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவொரு யுத்த வரவு – செலவுத்திட்டமாகவே அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் யுத்த செலவினங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கிய வரவு – செலவுத் திட்டமாகத்தான் உள்ளது. 2678.04 பில்லியன் ஒதுக்கீட்டையுடைய வரவு – செலவுத் திட்டத்தில் 355.195 பில்லியன் அதாவது 13 சதவீத ஒதுக்கீடு யுத்த செலவீனங்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டின் மிக முக்கியப் பிரச்சினையாகவுள்ள சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள 159.476 பில்லியன் நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது மொத்த செலவினத்தில் 5.95 சதவீதமாகும். கல்வித்துறைக்கு 126.54 பில்லியனாகும். இது 4.7 சதவீதமாகும்.

ஒரு நாடு முன்னேற்றகரமான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்குமானால் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும். மீண்டுமொரு யுத்த வரவு – செலவுத்திட்டத்தை ஒத்ததாகவே நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!