நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் – 11 மாநிலங்களில் போக்குவரத்து முடக்கம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை நடந்த 5 சுற்று பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது.

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நாளை (புதன்கிழமை) மீண்டும் 6-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்தநிலையில் புதிய திட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பகுஜன் சமாஜ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி, ஜார்க்கண்ட் முக்தி மோட்சா, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட 24 கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து உள்ளன.

மேலும் வங்கி ஊழியர்கள், அகில இந்திய ரெயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய ரெயில்வே பணியாளர்கள் தேசிய கூட்டமைப்பு ஆகிய 2 ரெயில்வே சங்கங்கள், மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர்கள், பெண்கள் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இன்று நடத்தும் “பாரத் பந்த்” போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

இன்று காலை விவசாயிகள் அறிவித்தப்படி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழுமையாக இருந்தது.

பெரும்பாலான மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் நாடு முழுவதும் 9, 19, 24, 44 மற்றும் 48 எண்கள் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.

13-வது நாளாக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்களது போராட்டத்தில் அரசியல் கலப்பு இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து இருந்தனர்.

அதன்படி டெல்லி புறநகர்களில் குவிந்துள்ள விவசாயிகள் இன்று காலை முதலே முக்கிய சாலைகளில் குவிந்தனர். 10 மணி அளவில் டெல்லிக்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் டெல்லியை நோக்கி வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள் ளானார்கள். மும்பை, லக்னோ உள்பட பல நகரங்களில் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சியினர் சாலை மறியலால் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது.

டெல்லியில் நடந்த போராட்டம் மற்றும் சாலை மறியலை பஞ்சாப் விவசாய அமைப்புகளின் தலைவர் தர்‌ஷன் பால் தலைமையேற்று நடத்தினார்.

டெல்லியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் அனைத்து எல்லை நிலை பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

டெல்லியை இணைக்கும் எல்லைகளான திக்ரி, ஜரோடா, தன்ஷா பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டன. சில சாலைகளில் இரு சக்கர வாகனங்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர்.

டெல்லியை இணைக்கும் பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநில சாலைகள் சீல் வைக்கப்பட்டன. இன்று பிற்பகல் 3 மணி வரை போக்குவரத்தை தடை செய்து இருப்பதாக போலீசார் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அனைத்து விவசாய சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்கள் செயல்படவில்லை.

அரசு அலுவலகங்களிலும் பெரும்பாலான பணியாளர் கள் வரவில்லை. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் மிக தீவிரமாக காணப்பட்டது. சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி விவசாயிகள் போராட்டம் செய்தனர்.

குஜராத் மாநிலத்தில் 3 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். ரோடுகளில் டயர்களை எரித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர்.
ஆமதாபாத்தை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

குஜராத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் போராட்டம் நடத்த வந்த விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். இதனால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.

குறைந்த அளவில் பஸ்கள், ஆட்டோக்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன. மும்பை, நாசிக், புனே, சோனாப்பூர் நகரங்களில் விவசாயிகளின் சந்தைகள் மூடப்பட்டன.

மும்பையில் கல்யாண், நவின் மும்பை, வாசி ஆகிய பகுதிகளில் பெரிய சந்தைகள் முழுமையாக மூடப்பட்டன.

பிரபல சமூக சேவகர் அன்னாஹசாரே விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 10 நிமிட ஆடியோ பதிவில், “விவசாயிகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள இதுவே சரியான நேரம்” என்று தெரிவித்து உள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் கணிசமான அளவுக்கு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாட்டில் சுமார் 400 இடங்களில் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின.

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றிகரமாக நடந்தது. வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருப்பு சின்னம் அணிந்து பணி செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 247 உணவு தானிய சந்தை கள், 6 பழ-காய்கறி மார்க் கெட்டுகள் மூடப்பட்டன. மதியம் 3 மணி வரை சாலைமறியல் நடக்கும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர். என்றாலும் இன்று மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நீடிக்கும் என்று விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன.