பவித்ரா ருசிபார்த்த மருந்தை பெற கேகாலையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

கேகாலையில் ஆயுர்வேத வைத்தியரால் கொரோனாவுக்காக கண்டுபிடித்ததாக கூறப்படும் மருந்தை பெற்றுக்கொள்ள இன்றைய தினம் (08) ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியது என கூறப்படும் இந்த மருந்தை தம்மிக்க பண்டார என்ற ஆயுர்வேத வைத்தியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அண்மையில் பரிசோதனை முயற்சியாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அருந்தி பரிசோதித்து இருந்தார்.

இந்நிலையிலேயே இன்று இதனை பெற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், 5 ஆயிரம் பேர் இந்த மருந்தை பெற்று சென்றுள்ளனர்.

குறித்த மருந்தினை பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் சென்று பெற்றதை அவதானிக்க முடிந்தது.

” ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கை விளக்கம் வழங்கிய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உணர்வுசார்ந்த – போரில் தம்முயிரை தியாகம் செய்த பிள்ளைகளை நினைவேந்தும் உரிமையை கொரோனா சட்டத்தைக்காட்டி நீதிமன்றம் ஊடாக தடுத்திருந்தது. ஆனால் இன்று ஆயுர்வேத திணைக்கள அனுமதி வழங்கப்படாத மருந்தை வழங்கும் நிகழ்வை அநாவசியமாக 10 ஆயிரம் பேரை கலந்துகொள்ளச் செய்து பாதுகாப்பு தரப்பின் ஆதரவுடன் நடத்த அனுமதித்துள்ளது. ” என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!