தவிசாளர் நிரோஷின் முன் பிணை மனு இன்று விசாரணை!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் பிணை கோரும் மனு இன்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிரதேச சபைக்கு சொந்தமான அச்செழு அம்மன் கோவில் வீதியில் பிரதேச சபையின் தீர்மானமின்றி சட்டத்திற்கு முரணாக அடிக்கல் நாட்டப்பட்டு காட்சிப் பதாகையும் அமைக்கப்பட்டிருந்தது. குறித்த காட்சிப் பதாகையினை தவிசாளர் அகற்றி இருந்தார். இதனால் மத்திய அரசாங்கத்துக்கும் உள்ளூராட்சி அதிகார அலகுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டமை தொடர்பில் தவிசாளர் நிரோஷ் பொது உடமைக்கு சேதம் விளைவித்தார் எனக் குற்றம்சாட்டி கடந்த திங்கட்கிழமை முதல் கைது செய்வதற்கு தீவிரமாக முயன்று வருகின்றார்கள்.

இதனையடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை மூத்த சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன் ஆலோசனைகளுடன் சட்டத்தரணிகளான வி. திருக்குமரன் மற்றும் வி. மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன் பிணை கோரி மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தனர்.

மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இன்று அச்சுவேலி பொலிஸாரையும் மன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தது. அம்மனு மீதான விசாரணை இன்று மல்லாகம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!