உயிருடன் இருக்கும் வரை இணைய விடமாட்டேன்!

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “சம்பந்தரும் சேனாதிராஜாவும் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் யுத்தத்தை நிறுத்த விரும்பவில்லை.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்கள். எனவே அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசுக் கட்சியுடன் எந்த காலத்திலும் இணைவதற்கு அனுமதிக்க மாட்டேன்.

ஆனால் இணைப்பதற்கு அவர்கள் தற்போது முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள். எனினும் நான் உயிருடன் இருக்கும் வரை அந்த முயற்சியை கைகூடாது சம்பந்தரும் சேனாதிராஜாவும் தங்களுடைய பதவிகளை துறக்க வேண்டும்.

ஏனெனில் தமிழ் மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள். தமிழ் மக்கள் இன்றைய நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்கள்தான்” என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!