ரஷியாவில் பயங்கரம்: முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

ரஷியாவின் பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்புல்டினோ என்ற கிராமத்தில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. மரத்தினால் ஆன கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த காப்பகத்தில் முதியவர்கள் 15 பேர் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த காப்பகத்தில் திடீரென தீ பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த கட்டத்திலும் பரவியது.

இதனால் காப்பகத்தில் இருந்த முதியவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். எனினும் காப்பக ஊழியர் உள்பட 4 பேர் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 4 மூதாட்டிகள் உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!