அபிவிருத்திக்கு தடை இல்லை- அதிகாரத்தை நிலைநாட்டவே முயற்சி!

மக்களுடைய அபிவிருத்திக்கு தான் எந்த விதத்திலும் தடை இல்லை எனவும், உள்ளூராட்சி மன்றத்தினுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே அபிவிருத்தி பதாதையினை அகற்றியதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஷ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

“இது அடிப்படையிலேயே ஒரு அதிகார பகிர்வு சார்ந்த விடையம். நாங்கள் இந்த பிரச்சினையை உள்ளூராட்சி மன்றத்தினுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டமாகத்தான் மேற்கொள்ளுகின்றோம். இந்த விடையத்தில் மாத்திரம் அல்ல இனிவரும் எந்த விடையத்திலும் உள்ளூராட்சி மன்றத்தினுடைய அதிகாரம் பாதிக்கப்பட கூடாது என்ற அடிப்படையிலேயே முன்கொண்டு செல்லுகின்றோம்.

இது தனியே எந்த பழிவாங்கலுக்கானதும் இல்லை. இது அடிப்படையிலேயே மக்களுடைய அபிவிருத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு உத்தி, ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கை. இதற்கு சகலரும் எங்களுடன் ஒன்றினைந்து பயனிக்கவேண்டும். அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் பிரதேச சபையினுடைய அதிகாரம் என்று வரும்போது அது மத்திய அரசாங்கத்தில் இருந்து பிரதேச சபைக்கு பகிரப்பட்ட விடயம்.

அவ்வாறு பகிரப்பட்ட விடயத்தை கூட நாங்கள் இன்று பல்வேறுபட்ட அரசியல் காரனங்களாக இருக்கலாம் அல்லது நிருவாக காரனமாக இருக்கலாம் பலதரப்பட்ட விடயங்களின் ஊடாக விட்டுக்கொடுக்க முடியாது என்ற தகவலை நாங்கள் கூறிக்கொள்ளுகின்றோம்.

கடந்த 4ம் திகதி தான் நான் பதாதையை அகற்றி இருந்தேன் அதற்கு முதல் 2ம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நான் பக்ஸ் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தேன். குறித்த கடிதத்தில் நீங்கள் எங்களுடைய அனுமதியின்றி வீதி புனரமைக்க இருக்கின்றீர்கள். இதற்கான பதாதை ஒன்றையும் நாட்டியுள்ளீர்கள், இந்த விடையம் தொடர்பாக எங்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தியிருந்தேன்.

பின்னர் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் சபையில் உறுப்பினர்களால் தொடர்ச்சியாக இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. எமது அவையில் இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிரதேச சபைச் சட்டம் 8:1 இன் பிரகாரம் முரண்நிலை இல்லாத சந்தர்ப்பத்தில் தவிசாளர் முழுமையான அதிகாரங்களையும் சகல விதத்திலும் பிரயோகிக்கமுடியும் என்ற நிலைமை கானப்படுகின்றது. இதன் பிரகாரம்தான் நான் பதாதையை அகற்றியிருந்தேன்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!