‘யு டியூப்’பில் பெண்களிடம் ஆபாச பேச்சு: போலீஸ் கடும் எச்சரிக்கை!

பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக, ஆபாச பேச்சு மற்றும் காட்சிகளை ஒளிபரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு, அதை வீடியோவில் பதிவு செய்த, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த அசேன்பாஷா, 23, பெருங்குடியைச் சேர்ந்த அஜய்பாபு, 24, மற்றும் தினேஷ்குமார், 31, ஆகியோரை, சாஸ்திரி நகர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இது குறித்து, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:’யு டியூப்’ சேனல் நடத்துவோர், பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக, ஆபாச பேச்சு மற்றும் காட்சிகளுடன் கூடிய வீடியோக்கள் ஒளிபரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அருவருக்கத்தக்க வகையில், ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்களை, உடனடியாக நீக்க வேண்டும். மீறுவோர் மீது, சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, ‘யு டியூப்’ சேனல்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!