பொது நிகழ்ச்சியில் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அலிபாபா நிறுவனர்!

சீன அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அலிபாபா குழுமம் உட்படுத்தப்பட்ட பின் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார் அதன் நிறுவனர் ஜாக் மா. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மாவின் நிறுவனங்கள் மீது சீன கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிடி இறுகிவரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்துக்கு பிறகு முதன் முறையாக, இன்று (புதன்கிழமை) காணொளி வாயிலாக சீனாவின் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 100 ஆசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஜாக் மா பேசியதாக உள்ளூர் அரசு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாங்காங் பங்குச்சந்தையில் தொடர் சரிவை கண்டு வந்த அலிபாபா நிறுவனத்தின் பங்குகளின் விலை இந்த தகவல் வெளிவந்தவுடன் சுமார் ஐந்து சதவீதம் உயர்ந்தன.

தனது அறக்கட்டளை முன்னெடுத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாக் மா, ஆசிரியர்களிடம் உரையாற்றியதாக சீனாவின் ஜெஜியாங் மாகாண அரசின் ஆதரவு பெற்ற தியான்மு நியூஸ் முதலில் செய்தி வெளியிட்டது.

ஆண்டுதோறும் சீனாவின் சான்யா என்ற நகரத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்வு, கோவிட்-19 தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

“பெருந்தொற்று காரணமாக நம்மால் சான்யாவில் சந்திக்க முடியாமல் போய்விட்டது” என்று தனது உரையின்போது ஜாக் மா கூறினார்.

“பெருந்தொற்று முடிவுக்கு வந்தவுடன், நாம் அனைவரும் நேரத்தை ஒதுக்கி, சான்யாவில் மீண்டும் சந்திக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

எனினும், அவர் எங்கிருந்து பேசினார் என்பது குறித்து காணொளியிலோ அல்லது தியான்மு நியூஸ் வெளியிட்ட செய்தியிலோ தெளிவுற குறிப்பிடப்படவில்லை.

சீன அரசுடன் மோதலா?

ஆசிய கண்டத்தின் ஐந்தாவது மிகப் பெரிய பணக்காரரான அலிபாபா குழும தலைவரான ஜாக் மா, கடந்த அக்டோபர் மாதம் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற ஒரு நிதி தொழில்நுட்ப மாநாட்டில், சீன வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாகவும், அதனால் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகே அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, இந்த மோதல் சூழ்நிலைக்கு பிறகே, அலிபாபாவின் ஆன்ட் குழுமத்தின் 37 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட ஆரம்ப பொது விடுப்புகள் (IPO) சீன அரசால் தடைசெய்யப்பட்டன. ஒருவேளை இது திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால், உலக பங்குச்சந்தை வரலாற்றில் மிகப் பெரிய பங்கு வெளியீடாக அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஜாக் மா பங்கேற்று வந்த “ஆப்பிரிக்காஸ் பிசினஸ் ஹீரோஸ்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி அத்தியாயத்தில் அவருக்கு பதிலாக வேறொரு நடுவர் சேர்க்கப்பட்டது அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வி எழ காரணமானது.

வேகமெடுக்கும் சீன அரசின் விசாரணை

சீனாவின் தொழில்நுட்ப ஜாம்பாவான அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற நிறுவனங்கள் மீது, சீன அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் பலத்தைக் குறித்து சீன அரசு கவலைப்படுவதைக் காட்டுகிறது.

சீன அரசு நெறிமுறையாளர்கள், இந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் மில்லியன் கணக்கிலான பயனர்களைக் குறித்தும், சீன மக்கள் அன்றாடம் பொருட்களை வாங்குவது மற்றும் பணப்பரிமாற்றம் செய்வதில் இந்த நிறுவனங்கள் செலுத்தும் ஆதிக்கத்தைக் குறித்தும் கவலைப்படுகிறார்கள்.

எனவே, அலிபாபா நிறுவனம், தன்னை மட்டுமே சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ள, முற்றொருமை (Monopoly) நடவடிக்கைகளை எடுக்கிறதா என சீனாவின் சந்தை நெறிமுறையாளர்கள் விசாரித்து வருகிறார்கள்.

இந்த விசாரணையை, சீனாவின் ஸ்டேட் அட்மினிஸ்ட்ரேஷன் ஃபார் மார்க்கெட் ரெகுலேஷன் (எஸ்.ஏ.எம்.ஆர்) என்கிற அமைப்பு, கடந்த டிசம்பர் மாதம் உறுதிப்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!