‘இ.பி.எஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது’ – வைகோ!

”பணத்தை கொட்டி கொடுத்தாலும், இ.பி.எஸ்., மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது,” என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.சேலம், ஐந்து ரோட்டில், மண்டல, ம.தி.மு.க., சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா, நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாகிகள், 25.60 லட்சம் ரூபாய் வழங்கினர். அதை பெற்று, வைகோ பேசியதாவது: எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற, முதல்வர் பிடிவாதமாக உள்ளார்.

அதன் பின்னால், லட்சக்கணக்கான விவசாயிகளின் கண்ணீரை பற்றி, அவர் கவலைப்படவில்லை. மத்திய அரசுக்கு எடுபிடியாக, அ.தி.மு.க., அரசு உள்ளது.பிரதமர், திருக்குறளை உச்சரித்தாலும், அவ்வையார் பாடலை பாடினாலும், தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் காஸ் விலை அதிகரிப்பால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திராவிட இயக்க கருவறை, ம.தி.மு.க., தான். தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். பணத்தை கொட்டி கொடுத்தாலும், இ.பி.எஸ்., மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. தேர்தலுக்கு பின், பொதுக்குழு நடத்தி, நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!