தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் கொரோனா தாக்கும்: தொற்று நோயியல் நிபுணர் அதிர்ச்சி தகவல்!

பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய் பிரிவு டாக்டரான தொற்று நோயியல் நிபுணரும், கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழு உறுப்பினருமான டாக்டர் ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும். ஆனால் நோய் பாதிப்புகள் ஏற்படாது. அதாவது காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் வராது. ஆனால் அவரிடம் இருந்து பலருக்கு வைரஸ் பரவும்.

அதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், நமது வாழ்க்கையின் இறுதி வரை முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

பொதுவாக ஒரு நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்க நீண்ட காலம் ஆகும். ஆனால் கொரோனா தடுப்பூசி 10 மாதங்களில் வெளிவந்துள்ளது. இதன் நோயை கட்டுப்படுத்தும் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை. 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் பிறகு அந்த விவரங்கள் தெரியவரும். ஆயினும் நமக்கு குறைந்த காலக்கட்டத்தில் தடுப்பூசி கிடைத்திருப்பது பெரிய விஷயம்.

இவ்வாறு ரவி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!