கட்டார் நாட்டில் உயிரிழந்த 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

கட்டார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கட்டார் நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உலக கிண்ணம் கால்பந்து திருவிழாவை நடத்தும் உரிமையை வென்றது. அன்று முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட இந்த ஐந்து தெற்காசிய நாடுகளில் இருந்து சராசரியாக 12 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் இறந்துள்ளனர்.

இலங்கை, இந்தியா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தரவுகள் படி 2011-2020 காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 5,927 பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2010 மற்றும் 2020 க்கு இடையில் பாகிஸ்தான் தொழிலாளர்கள் மேலும் 824 பேர் இறந்ததாக கட்டாரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகமாக இருந்தாலும்,

பிலிப்பைன்ஸ் மற்றும் கென்யா நாட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை.

மட்டுமின்றி, 2020 இறுதி மாதங்களில் நிகழ்ந்த மரணங்களும் சேர்க்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

எதிர்வரும் 2022-ல் கட்டாரில் உலக கிண்ணம் கால்பந்து திருவிழா முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக 7 புதிய பிரமாண்ட விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையம், சாலைகள், சாலை போக்குவரத்து வசதிகள், ஹொட்டல்கள், அத்துடன் புதிய நகரம் ஒன்றையும் கட்டார் வடிவமைத்துள்ளது.

இதன் பொருட்டு திரளான புலம்பெயர் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 6,500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ள நிலையில்,

37 பேர் மட்டும் கட்டுமானம் தொடர்பாக மரணமடைந்துள்ளதாக கட்டார் அரசு சார்பில் கூறப்படுகிறது.

தற்போது அம்பலமான இந்த தரவுகள், கட்டார் நிர்வாகம் அதன் 2 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறியதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக மனித உரிமைகள் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கட்டார் உலக கிண்ணம் கால்பந்து திருவிழா கட்டுமானம் தொடர்பான பணிகளில் ஈடுபட்ட இந்தியர்கள் 2,711 பேர் இறந்துள்ளனர்.

நேபாளம் நாட்டவர்கள் 1,641 பேர் இறந்துள்ளனர். வங்காளதேசத்து தொழிலாளர்கள் 1,018 பேர்களும், பாகிஸ்தானியர்கள் 824 பேர்களும் இலங்கையர்கள் 557 பேர்களும் கடந்த 10 ஆண்டுகளில் இறந்துள்ளனர்.

ஆனால் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படாமலும், இழப்பீடு கேட்டு போராடும் பரிதாப நிலையிலேயே உறவினர்களும் உள்ளனர்.

மட்டுமின்றி, தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்தும் குழப்பமே மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்திய, நேபாளம் மற்றும் வங்காளதேசம் தொழிலாளர்களிடையே 69% இறப்புகள் இயற்கையானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!