தமிழ் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன எமது மக்களைக் கைவிட்டுள்ளார். அவரிடம் இருந்து நாம் எதையும் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்.
வடக்கு மாகாண சபையின் 125ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் உறுப்பினர் து.ரவிகரன் நில ஆக்கிரமிப்புத் தொடர்பான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்மீதான விவாதத்தின்போதே அஸ்மின் இவ்வாறு தெரிவித்தார்.
‘ வனஜீவராசிகள் அமைச்சு அல்லது திணைக்களம் வடக்கு மாகாணத்தை மட்டும் குறிவைப்பது ஏன்?. ஏனைய மாகாணங்களில் சிறு காணிகளே ஆக்கிரமிக்கப்படுகின்றன. வடக்கில் பல்லாயிரக்கணக்கான காணிகள் அபகரிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் நிலங்களை மட்டும் குறிவைத்து வனஜீவராசிகள் அமைச்சு பறவைகள் சரணாலயத்தைப் பிரகனடனப்படுத்துகின்றது.
கேகாலை மாவட்டத்தில் மின் இணைப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அரசால் தனியாரிடம் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. வடக்கு மாகணத்தின் வவுனியா மாவட்டத்தில் அவர்களுக்குப் பதில் காணியை வழங்கியுள்ளனர். இவர்களுக்கும் வவுனியாவுக்கும் என்ன சம்பந்தம்?, அவர்களுக்கு எவ்வாறு அரசு இங்கு காணி வழங்க முடியும்?.
தமிழரின் காணிகளை அபகரிக்கும் அரசு திட்டமிட்ட குடியேற்றங்களை செய்ய இவ்வாறான உபாயங்களை மேற்கொள்ளுகின்றது. இது தற்போதைய ஆட்சியில் நடக்கின்றது. தமிழ் மக்கள் யாரை நம்பி அரச தலைவராக்கினார்களோ அவரே மக்களின் நிலத்தை அபகரித்து திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்குத் துணை போகின்றார்.
மைத்திரியும் தமிழர்களுக்கு துரோகம் இளைத்துக் கொண்டிருக்கின்றார். அவரை நம்பி எமக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை. என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!