நிலாவரை விவகாரம் – தவிசாளர் நிரோசிடம் 3 மணிநேரம் விசாரணை!

யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு பணிக்கு தடையாக செயற்பட்டதாக வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிஸார் நேற்று மூன்று மணி நேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் 2 மணியளவில் நிரோஷ் சென்றார். அங்கு மல்லாகம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் சுப்பிரின்டன் ஜே.சி. ஜெயக்கொடி தலைமையில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமுது பிரசன்ன, தொல்லியல் திணைக்களத்தின் யாழ் – கிளிநொச்சிக்குப் பொறுப்பான பணிப்பாளர் நளின் வீரதுங்க ஆகியோர் இருந்தனர்.

இதன்போது தொல்லியல் திணைக்களம் ஏற்கனவே குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்யப்போவதாக கூறியிருந்தது. ஆனால் அவர்கள் கட்டிட அத்திவாரம் வெட்டுவது போன்று ஆழமாக கிடங்கினை வெட்டினர். ஆந்த இடத்தில் கட்டிடங்கள் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச சபைக்குரிய பொறுப்புணர்வில் பார்வையிட நான் சென்றேன்.

அப்போது என்னை இராணுவத்தினர் விசாரணை செய்தார்கள். இதனால் அங்கே சுமூகமற்ற நிலைமை ஏற்பட்டது. மக்கள் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளில் சந்தேகம் கொள்வதனால் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்பட்டே செயற்பட வேண்டும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தினேன் என தவிசாளர் தெரிவித்தார்.

அதற்கு பொலிஸ் தரப்பில் இருந்தும் தொல்லியல் திணைக்கள தரப்பிடம் இருந்தும் தொல்லியல் திணைக்கள சட்டத்தின் பிரகாரம் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே இதில் தவிசாளர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர், நிலாவரை விடயத்தில் பிரதேச சபை பகிரங்க கேள்விக்கோரலில் கடந்த பலவருடமாக குத்தகைக்கு வழங்கி வருகின்றது. எனவே எமக்கும் அப் பிரதேசத்தில் நிர்வாக ரீதியிலான அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களிடத்தில் தங்கள் திணைக்களத்தின் பணிகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதனால் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் கட்டிடங்கள் திருத்தம், புதிதாக அமைத்தல் விடயத்தில் சபை அனுமதி பெறப்பட வேண்டியது சட்டமாகும் எனவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் தரப்பும் தொல்லியல் திணைக்களத் தரப்பும் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்குள் எவரும் தலையிடக் கூடாது எனவும் தவிசாளர் தான் மக்களை அழைத்து வந்து குழப்புகின்றார் என்றனர். தவிசாளர் ஒதுங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அதனை தவிசாளர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நீதிமன்றத்திற்கு விடயம் பாரப்படுத்தப்படும் என பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் தரப்பினால் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டிற்கான பதில் அறிக்கை தவிசாளரிடம் பெறப்பட்டது. அதன்போது தவிசாளர் யார் கூறி நிலாவரைக்கு வந்தார். நிலாவரையில் நின்ற வண்ணம் யார் யாருடன் தொலைபேசியில் பேசினார், என்ன பேசினார் என தனிமனித சுதந்திரத்திற்குப் புறம்பான விசாரணைகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!