முல்லைத்தீவு – கருவேலன்கண்டல் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி காணி ஒன்றில் சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்டிருந்த சுமார் 750 டிப்பர் லோட் கிரவலை தமது ஆளுகையின் கீழ் கொண்டுவந்துள்ள ஒட்டுசுட்டான் பொலிஸார் குறித்த காணிக்கு உரிமை கோரிய கிராம அலுவலரின் மனைவியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ள போதும் இதற்கு எதிராக திணைக்களங்கள் எதுவும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படடிருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை சம்பவ இடத்திற்குச் சென்ற ஒட்டுசுட்டான் பொலிசார் குறித்த கிரவல் குவித்து வைக்கப்பட்டிருந்த இடங்களை பார்வையிட்டதோடு குறித்த இடம் தொடர்பிலும் இங்கு கிரவல் யார் அகழ்ந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் கிராம அலுவலர் ஒருவரே குறித்த கிரவல் அகழ்வை மேற்கொண்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து றித்த காணிக்கு உரிமை கோரிய கிராம அலுவலரின் மனைவியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!