பாட்டியை கொடூரமாக எரித்து கொன்ற சிறுவன்: காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீசார்!

கிரைம் சீரியல்காலால் ஈர்க்கப்பட்ட 16 வயது சிறுவன், படுத்த படுக்கையாக இருந்த பாட்டியை கொடூரமாக எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் பஞ்சாபில், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

16 வயது சிறுவன் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது பாட்டியை இரும்பு கம்பியால் முதலில் தாக்கியுள்ளான். பின்னர் அவரை கட்டிலோடு சேர்த்து கட்டிவைத்து, தீ வைத்து கொடூரமாக எரித்து கொலை செய்துள்ளான். சம்பவம் நடந்த நேரத்தில், சிறுவனின் பெற்றோர் தங்கள் திருமண நாளை கொண்டாட கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கொலை செய்துவிட்டு அவர்களுக்கு போனில் தகவல் தெரிவித்த சிறுவன், யாரோ அடையாளம் தெரியாத 4 ஆண்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்து பாட்டியின் அறைக்கு தீ வைத்தாக கூறியுள்ளான்.

பதறியடித்தது வீட்டுக்கு வந்த அவர்கள், பாட்டி கட்டிலில் கட்டப்பட்ட நிலையில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்ததைப் பார்த்தனர். அவர்களிடம், தாக்குதல் நடத்திய நபர்கள் மொத்த குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தியதாக சிறுவன் கூறியுள்ளான்.

பிறகு அவர்கள் அந்த கொள்ளைக்கார கும்பல் மீது பொலிஸில் புகார் அளித்தனர். பின்னர் பொலிஸ் குழு சிறுவனை விசாரித்தபோது, அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இது அவனது பெற்றோருக்கு தூக்கிவாரிப் போட்டது.

விசாரணையில், “சிறுவன் தான் கிரைம் சீரியல்களால் ஈர்க்கப்பட்டதாகவும், சில காலமாக இந்த கொலையைத் திட்டமிட்டு வந்ததாகவும், திங்கட்கிழமையன்று அதற்கான வாய்ப்பு கிடைத்ததும், அவர் அந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்” என்று எஸ்.பி. ரவீந்தர் பால் சிங் சந்து கூறினார். 12-ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் கிரைம் சீரியல் பார்த்து பாதிக்கப்பட்டு இப்படி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!