கொரோனாவை தொடர்ந்து தமிழகத்தை மிரட்டும் “கருப்பு பூஞ்சை”!

கொரோனா வைரஸ் பிரச்சினை தீர்வதற்கே இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என மருத்துவத்துறை எச்சரித்துள்ளது. அதற்குள் புதிய பிரச்சினை உருவெடுத்துள்ளது. அது தான் கருப்பு பூஞ்சை நோய் தொற்று.கடந்த சில தினங்களாக ‘அது என்ன கருப்பு பூஞ்சை’ என கேள்வி எழுப்பாதவார்களே இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு கருப்பு பூஞ்சை என்ற வார்த்தை அனைவரது மனதிலும் பரவலாகி விட்டது.

கருப்பு பூஞ்சை எனப்படும் ‘மியூகோர்மைகோசிஸ்’ என்ற தொற்று நோயும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் மருத்துவம் பார்க்காவிட்டால், உயிர்பலி தான் அதனுடைய விலையாக இருக்கிறது என்பது வேதனையான தகவல்.

தமிழகத்தில்…

ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் உயிர்பலி வாங்கிய இந்த கருப்பு பூஞ்சை தற்போது தமிழகத்திலும் தலைவலியை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது.தமிழகத்தில் கொரோனாவின் 2-ம் அலையில் மீண்டவர்களில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அதனை கண்காணிக்க சிறப்பு குழுவையும் மாநில சுகாதாரத்துறை நியமித்திருக்கிறது.

யாருக்கு ஆபத்து

கருப்பு பூஞ்சை யார் யாரை பாதிக்கிறது, அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறியதாவது:-

கருப்பு பூஞ்சை என்ற நோய் தொற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கே வருகிறது. அதிலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் அதிக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், சிகிச்சையின் போது ‘ஸ்டீராய்டு’ மருந்துகளை பயன்படுத்தியவர்களேயே அதிகம் பாதிக்கிறது. மூக்கு வழியாக அந்த பூஞ்சைகள் சென்று முதலில் சைனஸ் பிரச்சினையை ஏற்படுத்தும். அதன்பின்னர் கண்ணை பாதித்து விட்டு, மூளையை நோக்கி நகர்கிறது. பாதிப்பு ஆரம்பிக்கும் போது அந்தந்த உறுப்புகளில் வலி ஏற்படும். அதன் மூலம் தொடக்க நிலையிலேயே கருப்பு பூஞ்சை நோய் தொற்றை கண்டறிந்து விடலாம். முதலிலேயே கண்டறிந்து விட்டால் மூளைக்கு செல்லாமல் தடுக்கலாம்.பொதுவாக கருப்பு பூஞ்சை கண், சுவாசப்பகுதி, மூளை ஆகிய 3 உறுப்புகளையும் நேரடியாக பாதிக்கிறது. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பு இருந்தது

மதுரையில் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலுவிடம் கேட்டபோது, மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 45 நாட்களில் 20 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட 20 நபர்களுக்கும் உரிய மருத்துவம் அளித்து குணமடைந்துள்ளனர். கருப்பு பூஞ்சை பாதிப்பு காரணமாக மதுரையில் இதுவரை உயிரிழப்போ, கண் பார்வை இழப்போ ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!