“அடுத்த 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை” – மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தீவிரமாக போராடி வருகிறது. இந்த நிலையில் கடந்த 15-ந்தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

இந்த மாநிலங்கள் மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான், மேகாலயா, மிசோரம், அருணாசலபிரதேசம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மராட்டியம், புதுச்சேரி ஆகும். 14-ந் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 73 மாவட்டங்களில் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

இதையொட்டி நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், “எங்களது தடுப்பூசிகள் வலிமை வாய்ந்தவை, மிகவும் பாதுகாப்பானவை. இணை நோயுடன் போராடுகிறவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா விவகாரத்தில் அடுத்த 100-125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று கூறிய அவர், ‘மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தொற்று எண்ணிக்கை சரிந்து வருவது குறையத்தொடங்கியுள்ளது. இது ஒரு எச்சரிக்கையாகும்.

எனினும், தற்போது கொரோனா நிலவரம் கட்டுக்குள் உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றினால் மூன்றாவது அலை நம்மை தாக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!