ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவிக்கும் பிரித்தானிய மாணவர்: மீட்குமாறு கண்ணீர் கோரிக்கை!

விடுமுறைக்காக ஆப்கானிஸ்தான் சென்ற பிரித்தானிய மாணவர் ஒருவர் காபூல் நகரத்தில் நாடு திரும்பமுடியாமல் சிக்கிக்கொண்டுள்ளார். இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரத்தைச் சேர்ந்த மாணவர் மைல்ஸ் ரௌட்லெட்ஜ் (Miles Routledge), வயது 21. Loughborough பல்கலைக்கழக மாணவரான இவர், கடந்த வாரம் ‘most dangerous countries to visit’ என கூகிளில் தேடி பிடித்து, வேண்டுமென்றே ஆப்கானிஸ்தானுக்கு விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்.

கடந்த வாரம் தாலிபான் படையினர் ஆப்கானிஸ்தானை படிப்படியாக கைப்பற்றிவந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கம் தங்கள் மக்களை உடனடியாக நாடு திரும்பும்படி எச்சரித்தனர்.

இருப்பினும், நாம் தலைநகர் காபூலில் தானே இருக்கிறோம், தாலிபான்கள் அங்கு வறுவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகலாம் என ரௌட்லெட்ஜ் சற்று மெத்தனமாக இருந்துவிட்டார்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. தாலிபான் படையினர் காபூலையும் பிடித்து ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.

இந்நிலையில், ரௌட்லெட்ஜ் நாடு திரும்ப முடியாமல் அங்கேயே மாட்டிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது நிலைமையை கூறி பேஸ்புக் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

காபூலில் விமான நிலையத்திற்கு செல்ல, தலையில் புர்கா அணிந்து செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாகவும், இருப்பினும் நிலையத்தில் கலவரமாக காணப்பட்டதால் அங்கு செல்லமுடியாமல் மீண்டும் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டதாக அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

தற்போது, காபூலில் இருக்கும் பிரித்தானிய தூதரகத்திற்கு தொடர்பு கொண்டுள்ள மைல்ஸ் ரௌட்லெட்ஜ், எப்படியாவது வீட்டுக்கு உயிருடன் சென்றுவிடவேண்டும் என வேண்டிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!