சைத்தான்களோடும் பேச வேண்டியேற்படலாம்! மனோ கணேசன்

அரசாங்கமும் – கூட்டமைப்பும் பேச்சு நடத்த முன்னர் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. அதற்கு முன்னமேயே “பேச வேண்டாம், பேச வேண்டாம்” என்ற குரலும் கேட்கின்றது. அவசியமானால், நாம் சைத்தானுடனும் கூட பேசியே ஆக வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாம் வாக்களித்திருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட அவர் இந்நாட்டு ஜனாதிபதி. இது அவரது அரசாங்கம். ஆகவே இந்த அரசுடன் பேசத்தான் வேண்டும்.

ஆனால், இந்த பேச்சுகளை ஜிஎல். பீரிஸ் என்ற மனிதரை முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்த முனைவது அத்துனை அறிவுடைமை அல்ல. அவர் ஒரு சிநேகபூர்வ மனிதர் தான். அவரது பாஷை நெகிழ்வு தன்மை கொண்ட பாஷை தான். ஆனால், அவர் இங்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரதிநிதி. அதை பேசப்போகும் கூட்டமைப்பு மனதில் கொள்ளும் என நம்புகின்றேன்.

அதேவேளை, “பேசவே வேண்டாம்” என கூறும் தரப்புகள், கூட்டமைப்பை விட்டு விட்டு, இந்த பேச்சுகளின் பின்புலத்து தரப்பை நோக்கி தங்கள் கேள்விகளை திருப்ப வேண்டும்.

அதுதான், அமெரிக்கா. அதன் இலங்கை பிரதிநிதி அலைனா டெப்ளிட்ஸ் தமிழ் அரசியல் கைதிகள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, 13ம் திருத்தமும், மாகாணசபை தேர்தலும், 16ம் திருத்தமும், மொழியுரிமைகளும், இவை ஏற்கனவே இன்று உள்ள சட்டங்களின் அடிப்படையில் செய்யக்கூடிய “குறைந்தபட்ச” விடயங்கள். இவற்றை செய்ய அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை அலைனா டெப்ளிட்ஸ் கொடுக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் “சடுதியான வாபஸ்” நிறைய பேரை யோசிக்க வைக்கின்றது. தங்கள் காரியம் ஆனாலோ, ஆகா விட்டாலோ, திடீரென கைவிட்டு விடுவார்களோ என்ற அச்சம் இப்போது, அமெரிக்க நண்பர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமை தொடர் வருவதால், இந்த சந்தேகம் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!