“10 நாட்களில் கோயில்களை திறக்காவிட்டால் இது நடக்கும்” – அரசை எச்சரித்த அண்ணாமலை!

‘பத்து நாட்களில் கோயில்களை திறக்காவிட்டால் அரசை ஸ்தம்பிக்கச் செய்வோம்” என்று தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் வெள்ளி சனி ஞாயிற்றுகிழமை உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் கோயில்களை திறக்க வலியுறுத்தி பா.ஜ. சார்பில் நேற்று மாநிலம் முழுதும் உள்ள முக்கிய கோயில்கள் முன் போராட்டம் நடந்தது. சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அருகே நடந்த போராட்டத்தில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதில் பா.ஜ.வினர் தீச்சட்டி ஏந்தியும், தேங்காய் உடைத்தும் கோயில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.பின் அண்ணாமலை அளித்த பேட்டி: ஆளுங்கட்சியின் சித்தாந்தத்தை கோயில் மற்றும் பூஜை அறைகளில் திணிக்க முயலும் போது; இல்லாத கொரோனாவை காரணம் காட்டி நம் உரிமையை மறுக்கும் போது மக்கள் போராட்டமாக நடத்த வேண்டிய கட்டாயம் பா.ஜ.வுக்கு ஏற்பட்டுள்ளது.

கடவுள் இல்லை; கடவுளை கும்பிடுபவர்கள் முட்டாள் என்பது தான் தி.மு.க.வின் சித்தாந்தம். அதை மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் புகுத்த முற்படுகின்றனர்.விநாயகர் சதுர்த்திக்கு தடை போட்டனர். தற்போது வெள்ளி சனி ஞாயிற்று கிழமைகளில் கோயில்களை மூடியுள்ளனர்.

கோயில்கள் மட்டுமின்றி மசூதி தேவாலயங்களையும் திறக்க வேண்டும். மக்கள் குரலுக்கு செவி சாய்க்காவிடில் 10 நாட்களுக்கு பின் அரசே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும்.குளிர்சாதன வசதியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன; அதன் வழியே கொரோனா பரவும். தியேட்டருக்கு போய் படம் பாருங்கள் என உதயநிதி எம்.எல்.ஏ. சமூக வலைதளங்கள் வாயிலாக சொல்கிறார். இதற்கு அரசு வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!