சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை முகாமில் அடைப்பு!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை திடீர்குப்பத்தை சேர்ந்த இளையபெருமாள் மகன்கள் சிவகுமார்(வயது 48), சிவநேசன்(42) ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சிவநேசன் உள்பட 23 மீனவர்கள் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11-ந்தேதி அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் 13-ந்தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 23 பேரையும் சிறைபிடித்தனர்.

விசைப்படகுகள் பறிமுதல்
மேலும் அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடித்த நாகை மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் அங்குள்ள காரைநகர் துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்
பின்னர் நாகை மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

முகாமில் அடைப்பு
இதை தொடர்ந்து நாகை மீனவர்கள், இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நாகை மீனவர்களை வருகிற 28-ந்தேதி(வியாழக்கிழமை) வரை காரை நகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில்,
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!