கலவரங்கள் வெடித்து இரத்த ஆறு ஓடும்! இலங்கையின் நிலவரம் தொடர்பில் பகிரங்க எச்சரிக்கை

விவசாயிகளும் நாட்டுமக்களும் வீதிகளில் இறங்கிப்போராட ஆரம்பித்தால், பாரிய கலவரங்கள் வெடித்து இரத்த ஆறு ஓடக்கூடும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய(Karu jayasooriya)எச்சரித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் கரு ஜயசூரியவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்வித்துறைசார் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைக்கு நேற்றைய தினத்துடன் தீர்வுகாணப்படும் என்று நாட்டுமக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்பினரும் பொறுமையுடன் செயற்பட்டிருந்தால் சுமார் இருவருடங்களின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்குச் செல்வதற்கும் தமக்குரிய சிறுவர் பராயத்தை அனுபவிப்பதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். இருப்பினும் தற்போது மாணவர்கள் மிகவும் துரதிஷ்டவசமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி ஆசிரியர்கள் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் அடக்குமுறைகளுக்கும் அவமதிப்புக்களுக்கும் இலக்காகினர். முதலில் நாட்டுமக்களின் உணர்வுகளை அரசாங்கம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே தற்போதேனும் பழிவாங்கல் நடவடிக்கைகளை நிறுத்தி, அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்புடன் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதுமாத்திரமன்றி மறுபுறம் இரசாயன உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதனால் மிகமோசமான பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இரசாயன உரத்திற்குப் பதிலாக சேதன உரத்தைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நேயமானதாக இருந்தாலும், உலகின் வேறெந்தவொரு நாடும் மிகக்குறுகிய காலத்திற்குள் உரவகையின் பயன்பாட்டை மாற்றியமைப்பதற்கு அழுத்தம் பிரயோகித்ததில்லை. அவ்வாறு மாற்றியமைப்பது நடைமுறையில் சாத்தியமான விடயமும் அல்ல.

மிகப்பாரியளவிலான சேதன உரப்பயன்பாட்டிற்கு மாறிய பூட்டான் கூட, அச்செயற்திட்டத்தில் வெற்றியடைவதற்கு எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுவரையில் காத்திருக்கின்றது.

இவையனைத்திற்கும் அப்பால் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற விவசாயிகளும் நாட்டுமக்களும் வீதிகளில் இறங்கிப்போராட ஆரம்பித்தால், கலவரங்கள் கூட ஏற்படக்கூடும்.

அவ்வாறான நிலை தோற்றம் பெறுவதற்கு இடமளிக்கவேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். உர விவகாரத்தில் விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளடங்கலாக இதுகுறித்து நன்கு தேர்ச்சிபெற்றவர்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பகிரங்கமாகவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

இந்நிலையில் தற்போது வௌ;வேறு நாடுகளில் இருந்தும் உரத்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உண்மையில் இதனை அரசாங்கம் 6 மாதகாலத்திற்கு முன்னரேயே செய்திருக்கவேண்டும்.

தற்போது இறக்குமதி செய்யப்படுகின்ற உரவகைகள் உரியவாறான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. எனவே சாதாரண விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதற்கேற்றவாறு அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!