‘ரூ.3 கோடி வரி செலுத்த வேண்டும்’ – நோட்டீஸால் பேரதிர்ச்சியில் ரிக்ஷா ஓட்டுநர்!

ரூ.3 கோடி வரி செலுத்த வேண்டும் என ரிக்‌ஷா ஓட்டுநருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பகல்பூர் அருகே அமர் பகுதியைச் சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநரான பிரதாப் சிங் என்பவர் வண்டி ஓட்டி தினமும் பிழைப்பு நடத்தி வருகிறார்.
    
இவருக்கு அண்மையில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒன்று அனுப்பியிருந்தது. அதில், பிரதாப் சிங் 3 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, போலீஸார் புகார் எதுவும் பதிவு செய்யாமல் விசாரிப்பதாக அவரிடம் கூறினர்.
பின்னர் இதுகுறித்து விசாரித்த போது, வங்கியிலிருந்து பான் கார்டு கேட்டதால், கடந்த மார்ச் மாதம் பிரதாப் பகல்பூர் பகுதியில் உள்ள ஜன் சுவிதா கேந்திராவில் பான் கார்டுக்கு விண்ணப்பித்தார்.

இதையடுத்து அவருக்கு உண்மையான பான் கார்டுக்கு பதிலாக நகல் பான் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவரது நிஜ பான் கார்டை கொண்டு அவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் ஜி.எஸ்.டி எண்ணைப் பெற்றுள்ளார்.

அந்த எண்ணில் 2018 முதல் 2019 வரை ரூ.43,44,36,201 வர்த்தகம் செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான் பிரதாப் சிங்கிற்கு ரூ.3,46,54,896 கோடி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து பிரதாப் சிங் பெயரில் மோசடி நடந்துள்ளது என்று கண்டுபிடித்த போலீஸார் அந்த நபர் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!