ஐதேக கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்தல், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நேற்று நடத்தியது.
   
மக்களின் கண்ணீர் வடிப்பதை அறியாத மோசமான இந்த அரசாங்கத்தை இல்லாதொழித்து மக்களின் துயர் துடைக்கும், சர்வதேச ரீதியில் நல்லுறவை பேணும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அதிகாரம் மீண்டும் மலர வேண்டுமென்றும் இதில் கலந்துகொண்ட ஐ.தே.க. ஆதரவாளர்கள் கோஷப் எழுப்பியும், பதாகைகளைத் தாங்கியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும், எமது நாட்டு விவசாயிகளுக்கு உரம் இல்லை, பட்டினிச் சாவில் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அரிசியின் விலையை நிர்ணயிப்பது டட்லி சிறிசேனவா?

அதிகரித்துச்செல்லும் வாழ்க்கை செலவு, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்காதே, குறைந்து செல்லும் டொலர் கையிருப்பு, கெரவலப்பிட்டி மின் நிலைய பங்குகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் தாங்கிய பாதாகைகளை தாங்கி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் ஆரம்பமாகி லிப்டன் சுற்றுவரை வந்த இந்த இந்த ஆர்ப்பாட்ட ‍ பேரணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் உறுப்பினர்களான நவீன் திசாநாயக்க, சாகல ரத்நாயக்க , கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்கள் , தொழிற்சங்கவாதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!