மக்கள் சேவைக்கு வரும் எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் எதற்கு?

மக்கள் சேவைக்காக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

ஆளும் தரப்பினரும் எதிர் தரப்பினரும் கொள்ளையடித்தவர்கள் தொடர்பாக பேசுகிறார்கள். நாமும் இந்தக் கொள்ளையர்கள் எப்போது பிடிப்பட்டு சிறைக்குச் செல்வார்கள் என்பதை காண ஆவலாக இருக்கிறோம். மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்கள் இருந்தால், அவர்களை சிறையில் அடையுங்கள். நாமும் அதனைக் காண மகிழ்ச்சியாக காத்துக் கொண்டிருக்கிறோம்.

நிதியமைச்சரின் 2022 வரவு – செலவுத் திட்ட உரையானது, திருமண வீட்டில் கதைக்க வேண்டிய கதையை மரண வீட்டில் கதைத்ததைப் போன்றுதான் காணப்பட்டது. மிகவும் சவால் மிக்கதொரு காலத்தில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நிதியமைச்சரின் ஊடாக மக்களுக்கு ஏதேனும் நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.
இந்த வரவு – செலவுத் திட்டமானது, இலங்கையின் பொருளாதாரம் குறித்து அக்கரையில்லாமல் தயாரித்தது போன்றுதான் காணப்படுகிறது. உதாரணமாக ஒரு கிராம அபிவிருத்திக்காக 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து கொண்டு வரப்பட்டதாகவே தெரிகிறது. செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் அவசியமா என்பதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். இது நாட்டின் அபிவிருத்தியை பெரிதும் பாதிக்கும்.

30 வருடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கென விசேட நிதிகள் ஒதுக்கப்படவில்லை. வீதிகளை அபிவிருத்தி செய்யும்போதும், மக்களுக்கு பயனுள்ளதாக அவற்றை அமைக்க வேண்டும்.

மாறாக பிரதேச சபை உறுப்பினருக்காகவோ, கட்சித் தொண்டர்களுக்காகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்காகவோ வீதிகளை நிர்மானிக்கக்கூடாது. அத்தோடு, வேலை செய்ய முடியாத இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் பதவிலிருந்து விலக்க வேண்டும். அவருக்கு வாகனம் கொடுத்து, டீசல் கொடுத்து, சாரதி, அலுவலம், சம்பளம் என எல்லாம் கொடுத்து அவரால் வேலை செய்ய முடியாவிட்டால் அவர் அந்தப் பதவியில் இருப்பதில் பயனில்லை.
ஷ அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாலேயே நன்றாக வேலையை செய்ய முடியும். எனவே, அரசாங்கம் இதுதொடர்பாகவும் சிந்தித்து, ஒரு கொள்கை முடிவொன்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக பேசப்படுகிறது. எனக்கு வயது 31 தான் ஆகின்றது. எனக்கு உண்மையில் ஓய்வூதியம் தற்போது தேவையில்லை.
என்னைப் பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எனும் ஒன்றே தேவையில்லை. மக்கள் சேவைக்காக வரும் உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்?ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தற்போது எழுந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டு குறித்த விடயம் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளனர் என நான் அறியக்கிடைத்தேன். மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துக்களைக் கூறாமல், பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமெனில் சில தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!