இந்துத்வா இராஜதந்திரத்தை கையிலெடுக்கிறது இலங்கை அரசு!

பி.ஜே.பி.யை திருப்திப்படுத்துவதற்காக இந்துத்வா இராஜதந்திரத்தை கையிலெடுக்கிறது இலங்கை அரசாங்கம். அதற்காகவே பல்வேறு நாடகங்கள் அரங்கேறி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இன்று இந்து-பௌத்த நல்லுறவு பற்றி பேசுகின்றீர்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மிகவும் பலமான நிலையிலுள்ள பாரதிய ஜனதா கட்சியை திருப்திப்படுத்துவதற்கு -இந்துத்வா கருத்தியலுக்கு நெருக்கமானவர்களாக உங்களை காண்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றீர்கள்.

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட கண்டியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்திலுள்ள கல்லை ராமர் கோவில் கட்டுவதற்கு கொண்டு போகின்றார். இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுப்பது பற்றிய சட்ட மூலத்தைக்கொண்டு வருகின்றீர்கள். அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத்கீதையின் பிரதியை பிரதமர் மோடிக்கு பரிசளிக்கின்றார்.
இதன்மூலம் நீங்கள் கூறுவருவது தெளிவாகவே புரிகின்றது. பி.ஜே.பியை திருப்திப்படுத்துவதற்காக இந்துத்வா இராஜதந்திரத்தை கையிலெடுத்திருக்கின்றீர்கள். இந்து – பௌத்த ஒற்றுமை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால் மறுபுறும் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் இந்து தமிழ் மக்களின் சமத்துவம் கௌரவத்தை உறுத்திப்படுத்துவதை எதிர்க்கின்றீர்கள்.

பாரம்பரிய இந்து ஆலயங்களை பௌத்த விகாரைகளாக பிரகடனப்படுத்துகிறீர்கள். அவ் இடங்களை பௌத்த பிக்குகள் ஆக்கிரமிப்பதற்கு உங்கள் படைகள் உதவுகின்றன. இன்று பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியிருக்கின்றீர்கள். ஆனால் இந்து மதத்தினதோ அல்லது இலங்கையில் உள்ள ஏனைய மதங்களினதோ வளர்ச்சிக்கு நிதியொதுக்கவில்லை.

இங்கும் உங்களுடைய உள்நோக்கம் வேறு என்பதை நாமறிவோம். இந்துத்வா கருத்தியலுக்கு நெருக்கமானவர்களாக உங்களை காண்பித்துக்கொண்டு இந்தியாவின் ஆதரவுடன் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் ஆக்கலாம் என்று எண்ணுகின்றீர்கள்.
13 ஆவது திருத்தத்தை தூக்கிவிட்டு தமிழ் மக்களுக்கு இலங்கையின் அதிகாரத்தில் எந்தவொரு பங்கினையும் வழங்க முடியாதென்று கூற முற்படுகின்றீர்கள்.

அதாவது இந்தியாவின் இந்து மக்களை பயன்படுத்தியே வட கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்களை அதிகாரமற்றவர்களாக்கலாம் என்று கணக்குப் போடுகின்றீர்கள்.
இவ்வளவு அனுபவங்களுக்கு பின்னரும்கூட தமிழ் மக்களை எவ்வாறு மேலும் ஒன்றுமில்லாதவர்களாக்கலாம் என்றே சிந்திக்கின்றீர்கள்.

காலம் சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க 1973 இல் கூறிய ஒரு விடயத்தை இப்போது நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன். ‘நாடு எரிமலையின் மீது அமர்ந்திருக்கின்றது அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றார்
அன்று சிறிமாவோ அம்மையார் கூறியது இப்போதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. அந்தளவிற்கு நாடு அதளபாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கின்றது. உண்மையில் இந்த நாடு எந்த நிலையிருக்கின்றது?

பஞ்சத்தில் மக்கள் சாக நேரிடுமோ என்று அஞ்சுமளவிற்கு பொருள் தட்டுப்பாடு. ஏழை மக்களால் சமாளிக்கவே முடியாதளவிற்கு விலைவாசி உயர்வு, அன்னியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்டிருக்கும் மோசமான வீழ்ச்சி, மோசமான நிதி நெருக்கடியென நாட்டின் பொருளாதார நிலை வங்குரோத்து நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இலங்கையின் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி இதற்கு முன்னர் ஓரு போதுமே ஏற்பட்டதில்லை.

இதற்கு காரணம் என்னவென கேட்டால் கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டுவார்கள். ஆனால் இன்றைய பெரும் நெருக்கடிக்கு கொரோனா வைரஸ் தொற்று மட்டுமே காரணமா என்ற நேர்மையான கேள்வியை நாம் கேட்கின்றோம்.

கொரோனா தொற்று உலகளாவிய நெருக்கடி என்பது ஒரு காரணம் மட்டுமே, பல நாடுகள் இந்த நெருக்கடி நிலையை வெற்றிகரமாக கையாண்டு வருகின்றது. அரசாங்கத்தின் திறமையும் அதில் சார்ந்தே உள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடி திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல, இது வெகுகால புற்றுநோய். இப்போது மறைக்க முடியாத அளவிற்கு நோய் முற்றிவிட்டது.

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளை தீர்க்கவோ, நியாயமான கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை. மாறாக தமிழர் மீதான கட்டவிழ்த்த அடக்குமுறையை கையாண்டீர்கள். இதற்கு ஆட்சியை முன்னெடுத்த இரண்டு கட்சிகளும் பொறுப்பாகும்.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் புறக்கணிப்பட்ட காரணத்தினால்தான் இந்த நாடு ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் சிக்கியது. நாட்டின் ஒட்டுமொத்த வளமும் யுத்தவெற்றியில் முதலீடு செய்யப்பட்டது. யுத்த வெற்றிக்காக பல நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலையேற்பட்டது.

இதனால்தான் நாடு பெரும் கடன்சுமைக்குள் சிக்கியது. அத்துடன் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பின்னடைவைக் கண்டது. நீங்கள் விரும்பிய யுத்த வெற்றிக்காக முழு நாட்டையும் அடகுவைக்க நீங்கள் தயங்கவில்லை. இதன் காரணமாகத்தான் இந்த நாடு இன்று வல்லரசுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கியிருக்கின்றது.

நீங்கள் விரும்பிய யுத்த வெற்றி உங்களுக்கு கிடைத்துவிட்டது ஆனால் உங்களால் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியவில்லை. பொருளாதார ரீதியில் கையேந்தாத இலங்கை சமூகமொன்றை உருவாக்குவதில் உங்களால் வெற்றிபெற முடிந்ததா? இந்த நாடு எதிர்கொண்டிருக்கும் வரலாற்று நெருக்கடிக்கான உண்மையான காரணத்தை இந்த பின்னணில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் எத்தனையோ வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கவில்லை.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஆரம்பத்திலேயே பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் இந்த நாடு யுத்தத்தை நோக்கி சென்றிருக்காது. நாட்டின் வளமும் சிதைந்திருக்காது. நாடு கையேந்தும் நிலைக்கும் சென்றிருக்காது. இவ்வாறானதொரு வரலாற்று நெருக்கடிக்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது.

தமிழ் மக்களை எப்போதுமே இரண்டாம் தர பிரஜைகளாக வைத்திருக்க வேண்டுமென்னும் உங்கள் தீராத ஆசையினால் நீங்கள் சாதித்தது என்ன? சிங்கள இளைஞர் யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி செல்வதற்காக வரிசையில் நிற்கின்றனர்.

ஒரு காலத்தில் இராணுவ கெடுபிடிகளாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலாலும் எமது இளைஞர் யுவதிகள் நாட்டைவிட்டு வெளியேறினர். அவ்வாறானவர்கள்தான் இன்று புலம்பெயர் சமூகமாக வளர்ச்சியுற்றிருக்கின்றனர். இன்று பொருளாதார நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாமல் சிங்கள – இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!