
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நேற்று காலையும் மாலையும் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.
கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் இல்லத்தில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முதல் அமர்வு இடம்பெற்றது.
மாலை அமர்வு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இரா.சம்பந்தன், ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, கி.துரைராஜசிங்கம், த.கலையரசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வராமையால் பொன். செல்வராசா இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை.
தமிழரசுக் கட்சியின் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தில், இன்ற நடைபெறும் தமிழ்க் கட்சிகளின் கூட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சம்பந்தனோடு சுமந்திரனும் பங்குபற்ற வேண்டும் என அரசியல் குழுவின் அனைத்து அங்கத்தவர்களும் வலியுறுத்தினர்.
சுமந்திரனுடன் தான் மேற்படி கூட்டத்தில் பங்குபற்றுதாக, ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்து விட்டதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
போரின் பின்னர் கடந்த பன்னிரண்டு வருட காலத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் கூட்டமைப்பாக தமிழரசின் நிலைப்பாடு தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கே நமது தமிழ் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் ஆணை தந்துள்ளனர்.
அந்த ஆணையைப் பிரதிபலிக்கும் விதத்தில் இன்றைய தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதில் தமிழரசுப் பிரதிநிதிகளான மாவை சேனாதிராஜாவும் மற்றும் சம்பந்தனும் கையெழுத்திட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மக்களிடம் தமிழரசுக் கட்சித் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலம் பெற்ற ஆணைக்கு அமைவாக அந்த ஆவணத்தை ஒழுங்குபடுத்துவதை சுமந்திரன் விசேடமாகக் கவனிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!