“மீனவர் பிரச்னை குறித்து மத்திய அரசு கவலைப்படுவதே இல்லை” – சீமான் ஆதங்கம்!

17-வது சுனாமி நினைவு தினம் நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
   
வாழ்க்கை முழுவதுமே எங்களுக்கு போராட்டமாக இருந்தால் நாங்கள் வாழ்வது எப்போது? மீனவர் பிரச்னை குறித்து மத்திய அரசு கவலைப்படுவதே இல்லை. உயிரிழப்பது, சிறை தண்டனை அனுபவிப்பது, படகை பறிகொடுப்பது, வலையை பறிகொடுப்பது எல்லாம் தமிழருக்கு நடக்கின்றன. இதனால் மத்திய அரசு கவலைப்படுவதில்லை. மத்திய அரசுக்கு தமிழரின் வரி வேண்டும், வாக்கு வேண்டும், வளங்கள் வேண்டும். ஆனால் தமிழர்கள் உயிர் பறிக்கப்படுவதை மத்திய அரசு பொருட்படுத்துவது கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு கடலுக்குள் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை உருவாகி இந்தியா உள்பட 14 நாடுகளை பாதித்தது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்கியது. இதில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 17 ஆம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரும் கடலுக்குள் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!