ஜனாதிபதி எம்மை தாராளமாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கலாம் – உதய கம்மன்பில

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பினை மீறியுள்ளோம் என ஜனாதிபதி கருதினால் எம்மை தாராளமாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கலாம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (udaya gammanpila)  தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகியதன் பின்னர் அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் போது அமைச்சு பதவிகளை இழக்க நேரிடும் என்பதை நன்கு அறிவோம். அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மனசாட்சிக்கமைய நாட்டுக்காக செயற்பட வேண்டும் என்ற காரணத்தினால் யுகதனவி விவகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

யுகதனவி மின்நிலையம் தொடர்பிலான ஒப்பந்தம் முறையற்றதாகும் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் பகிரங்கப்படுத்தியுள்ளோம். மனசாட்சிக்கு அமைய செயற்பட்ட காரணத்தினால் அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சரவை அனுமதியுடன் முறையாக கைச்சாத்திடப்படவுமில்லை. ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தப்படவுமில்லை என்பதை அமைச்சரவை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நாட்டு மக்களுக்கும், நீதிமன்றிற்கும் அறிவித்தோம் என இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்களாக உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கர, விமல் வீரவன்ச ஆகியோர் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு சார்பாக உயர்நீதிமன்றிற்கு சமர்ப்பித்துள்ள சத்தியகடதாசி அரசியலமைப்பிற்கு முரணானது என சட்டமா அதிபர் மனுக்களை பரிசீலனை செய்யும் ஜவர் கொண்ட பூரண நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த 17 ஆம் திகதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.     

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!