நடுவானில் தன்னை சுய தனிமைப்படுத்திக்கொண்ட பெண்: ஆச்சரியமூட்டும் கோவிட் சம்பவம்!

நடுவானில் விமானத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட பெண் ஒருவர், அடுத்த சில மணிநேரங்களுக்கு விமான கழிவறையில் சுய தனிமைப்படுத்திக்கொண்டார். மரிசா ஃபோட்டியோ (Marisa Fotieo) எனும் அப்பெண், டிசம்பர் 19 அன்று சிகாகோவிலிருந்து ஐஸ்லாந்தின் ரெய்காவிக் நகருக்கு IcelandAir விமானத்தில் சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    
மரிசா தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் தனது இறுதி இலக்கான சுவிட்சர்லாந்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

மரிசா, விமானத்தில் ஏறுவதற்கு முன், 2 பிசிஆர் சோதனைகள் மற்றும் சுமார் 5 ரேபிட் டெஸ்டுகள் எடுத்துள்ளார், அனால் அவை அனைத்தும் எதிர்மறையாக வந்தன.

ஆனால் விமானத்தில் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் கழித்து, அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டது.

சிகாகோவில் ஆசிரியராக இருக்கும் மரிசா ஃபோட்டியோ, முழுமையாக தடுப்பூசி போட்டு, பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றவர்.

இந்த நிலையில் அவர், தொடர்ந்து அசாதாரணமாக உணர்ந்ததால், விமானத்திலேயே மற்றோரு முறை சோதனை செய்துள்ளார். ஆனால் இந்தமுறை அவருக்கு தொற்று இருப்பதாக சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தது.

விமான கழிவறையில் இந்த சோதனை முடிவை கண்ட அவர், பீதியடைந்ததாகக் கூறினார்.
உள்ளேயே அழுதபடி, ராக்கி எனும் விமானப் பணிப்பெண்ணை அழைத்து விடயத்தை கூறியுள்ளார். அவர் தன்னை மட்டுமின்றி, தன்னுடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவருந்திய தன் குடும்பத்தை நினைத்தும், விமானத்தில் இருந்த மற்றவர்களை நினைத்தும் அவர் பதட்டமாக இருந்துள்ளார்.
அந்த சூழலில் அவரை சமாதானப்படுத்திய விமான பணிப்பெண் ராக்கி, மரிசாவை பாதுகாப்பாகவும், தனியாகவும் வைத்திருக்க இருக்கையை மாற்றியமைக்க தன்னால் முடிந்ததைச் செய்துள்ளார், ஆனால் விமானம் நிரம்பியிருந்தது.

அவர், மரிசாவிடம் சென்று போதுமான இருக்கை கிடைக்கவில்லை என்று சொன்னபோது, ​​’நான் கழிவறையிலேயே இருக்க விரும்புகிறேன், ஏனென்றால் நான் விமானத்தில் மற்றவர்களுடன் இருக்க விரும்பவில்லை,” என்று மரிசா ஃபோட்டியோ கூறியுள்ளார்.

அதன் பிறகு கழிவறையின் கதவு சேவையில் இல்லை என்று ஒரு குறிப்பு போடப்பட்டது. கடைசியில், கழிவறைதான் விமானம் தரையிறங்கும் வரை மரிசாவுக்கு கிடைத்த புதிய இருக்கையாக இருந்துள்ளது.

சுமார் 3 மணி நேரம் கழிவறைக்குள் இருந்தார். பணிப்பெண் ராக்கி, அவரை தொடர்ந்து பரிசோதித்து, அவருக்கு ஏராளமான உணவு மற்றும் பானங்களை வழங்கினார்.

இப்படியொரு சங்கடமான சூழலில், அவர் ஒரு TikTok வீடியோவையும் செய்தார், அது 4.3 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தில் விமானம் தரையிறங்கியவுடன், மரிசாவும் அவரது குடும்பத்தினரும் விமானத்திலிருந்து கடைசியாக வெளியேறினர். அவருடைய சகோதரனுக்கும் அப்பாவுக்கும் எந்த அறிகுறியும் இல்லாததால், அவர்கள் சுவிட்சர்லாந்திற்கு தங்கள் இணைப்பு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் மரிசாவுக்கு விரைவான மற்றும் பிசிஆர் சோதனை செய்யப்பட்டது, அவை இரண்டும் நேர்மறையாகவே இருந்துள்ளது.

பின்னர் அவர் ரெட் கிராஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் தனது 10 நாட்கள் தனிமைப்படுத்தலைத் தொடங்கினார்.

மருத்துவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை அவரைப் பரிசோதித்தனர், அவருக்கு உணவு வழங்கப்பட்டது மற்றும் மருந்து உடனடியாகக் கிடைத்தது.

அவரது தனிமைப்படுத்தல் முழுவதும், அவர் டிக்டோக்கில் அனுபவத்தை தொடர்ந்து ஆவணப்படுத்தினார். அவர் சமூக ஊடகங்களில் தொடர்பில் இருந்த விமான பணிப்பெண் ராக்கி என்பவரிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசுகளையும் தின்பண்டங்களையும் பெற்றார்.

மரிசா கடைசியாக டிசம்பர் 30, வியாழக்கிழமை வரை தனிமைப்படுத்தலில் இருந்தார். இந்நிலையில், அவர் ஜனவரி 3-ஆம் திகதி அவர் திட்டமிட்டிருந்த இடத்திற்கு செல்லவுள்ளார்.
இதற்கிடையில், அவர் ஐஸ்லாந்தை விட்டு வெளியேறும் முன் ராக்கியை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!