பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்கக்கோரி கையெழுத்து போராட்டம் ஒன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
    
இது குறித்து முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடக சந்திப்பொன்றினையும் நடத்தியுள்ளார்.

இதன்போது நடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்து போராட்டத்தினை தொடங்கி வைத்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கக்கோரி கையெழுத்து போராட்டம் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் மிக மோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்திற்கு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது. 42 ஆண்டுகளாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் இளைஞர்களை நசுக்குகின்ற ஒடுக்கி ஆழ்கின்ற சட்டமாக சர்வதேச விழுமியங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி செயற்படும் சட்டமாக இருக்கின்றது.

அது நீக்கப்படும் என்று இலங்கை அரசு தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி கொடுத்துள்ளது.அவ்வாறு நீக்குவதற்கான முயற்சியும் சென்ற அரசாங்க காலத்தில் இடம்பெற்றுள்ளது. அது முழுமைபெறவில்லை.ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை சீர்திருத்துகின்றோம் என்று சொல்லி எந்த வித உப்புச்சப்பில்லாத ஒரு சீர்திருத்தமாக அறிவிக்கப்படுகின்ற ஒரு வர்த்தமானி பிரசுரம் வந்துள்ளது.

அது நடைமுறையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் அமுலில் எந்த மாற்றத்தினையும் செய்யப்போவதில்லை ஆகவே சர்வதேச ஏமாற்றுவதற்கு விசேடமாக ஜரோப்பிய ஒன்றியத்தினை ஏமாற்றுவதற்கு என்றும், எதிர்வரும் 28 ஆம் திகதி ஜக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது.

அவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் இது செய்யப்படுகின்றது. அவர்கள் எல்லாருக்கும் விளக்கமாக விடையஙங்களை அறிவித்துள்ளோம். இந்த தருணத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்குவோம் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.

அந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும்.அந்த தடுப்பு சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எங்கள் மக்கள் நேரடியாகவே கையெழுத்திட்டு கோருகின்ற ஆவணத்தினை கையெழுத்திட்டு ஆரம்பித்து வைக்கின்றோம்.இது எட்டு மாவட்டங்களிலும் மக்களிடத்தில் வீடு வீடாக சென்று வீதி வீதியாக சென்று மக்களின் கையெழுத்து வாங்கி இன்று ஆரம்பித்து வைக்கின்றோம்.

தமிழரசு கட்சியின் இளைஞர் அணி கையெழுத்து போராட்டத்தினை மக்களிடத்தில் முன்கொண்டு செல்லவுள்ளது. யாழில் நடைபெறுகின்ற மீனவர்களின் போராட்டத்தின் கருத்தில் கொண்டு அந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு வந்த பின்னர் கையெழுத்து போராட்டத்தினை முழு வீச்சாக செயற்படுத்துவோம் என்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!