ஒரு சில சிங்கள தலைவர்களை விட ஏனையவர்களுக்கு தைரியம் இல்லை! இரா. சம்பந்தன்

இலங்கை அரசாங்கமானது நீண்டகாலமாக ஆழமான தண்டனையின்மை கலாச்சாரத்தில் ஊறியுள்ளது என  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான .இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளரின் இலங்கை அறிக்கை தொடர்பில்   இரா சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த அறிக்கையில், 

”இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வறிக்கைக்கான இலங்கை அரசின் பதில் அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் சில முக்கிய காரணிகளைக் குறிப்பிடுவது முக்கியமானதாகும். சிறப்பு நிபுணர் குழுவின் அறிக்கையில், குறிப்பாக இறுதி யுத்த கட்டத்தில் நம்பத்தகுந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையாளரின் உள்ளக விசாரணையும் இதனையொத்த ஒரு முடிவிற்கு வந்துள்ளது. இலங்கையின் தற்போதுள்ள அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களும் இதுவரை எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்கவில்லை.

தற்போதைய அரசாங்கமானது முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் கலப்பு பொறிமுறை அடங்கிய இணை அனுசரணை பிரேரணையிலிருந்து விலகிக் கொண்டது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒட்டுமொத்த பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. இலங்கை அரசாங்கமானது சுதந்திரம் அடைந்ததது முதல் நீண்டகாலமாக ஆழமான தண்டனையின்மை கலாச்சாரத்தில் ஊறியுள்ளது.

இது தமது அரசியல் பலத்தைத் தொடர்ந்தும் தக்க வைப்பதற்காகச் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக உள்ளக வாக்குறுதிகளை மதிக்காமலும் அதன் விளைவாகக் கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதிலும் சரியான முடிவுகளை எடுப்பதிலும் அல்லது வேறெந்த ஒரு விடயத்திலும் தீர்மானம் எடுக்கும் நிலைகளில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

எல்லா அரசாங்கங்களும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காகப் பேரினவாதத்தினை ஆதரிக்கும் கொள்கைகளை முன்னிறுத்தி வந்துள்ளனர். இது இலங்கை நாட்டிற்கு பாரிய பாதகங்களைக் கொண்டுவந்துள்ளதுடன், ஒருமித்த இலங்கை நாட்டின் மக்களையும் இது பாதித்துள்ளது.

உண்மை நிலைமையினை சிங்கள பௌத்த மக்களிற்கு எடுத்துக் கூறினால் அவர்கள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள், ஆனால் ஒரு சில சிங்கள தலைவர்களை விட ஏனையவர்களிற்கு இதனை செய்வதற்குத் தைரியம் இல்லை.
இலங்கை முகங்கொடுத்துள்ள வரலாறு காணாத பிரச்சினைக்கும் மீண்டெழுந்து வரமுடியாத நிலைமைக்கும் இதுவே பிரதான காரணமாகும்.

இதேவேளை ஆயுதமேந்தாத பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்களின் நிலைமையைக் குறிப்பிடுவது முக்கியமானதாகும். இவர்கள் யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளானவர்கள், ஏனையோர் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டவர்கள், ஏனையவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தவர்கள்.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுப் பாதிப்படைந்த இந்த மக்கள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுகிறார்கள்.

இவர்கள் பழிவாங்கலை நாடவில்லை மாறாக பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மீள் நிகழாமை, மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை உறுதி செய்யுமாறே வேண்டுகின்றனர். அவர்கள் உண்மை நிலைநாட்டப்படவேண்டும் எனக் கோருகின்றனர்.

உண்மை உறுதி செய்யப்படாமல் நீதி நிலைநாட்டப்பட முடியாது. இலங்கை ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அத்தகைய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பாகும்.

இதனை செய்யத் தவறுவதானது தற்போது நிலவும் தண்டனையின்மையை உறுதி செய்வதாகவே அமையும். தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணை மற்றும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் போன்றன இலங்கையில் எது நடந்தாலும் அது ஒரு உள்ளக நிகழ்வாகவும், இறையாண்மை தொடர்பான விடயமாகவும் அதில் வெளி தலையீடுகள் இருக்க முடியாது எனவும் எண்ணுவதற்குத் தூண்டுகிறது.

இலங்கையின் தண்டனையின்மை கலாச்சாரமானது சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டிய தருணத்தை எட்டியுள்ளது.

சொந்த மக்களது இறையாண்மை மதிக்கப்பட்டு அவர்கள் சுய மரியாதை மற்றும் கௌரவம், சமத்துவம் மற்றும் நீதி மேலும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்ற போது தான் ஒரு நாட்டின் இறையாண்மை புனிதத்துவம் பெறுகின்றது என்பதனை குறிப்பிடவேண்டும்.

ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இத்தகைய நிலைமை இல்லாத நிலையில் அரைவாசிக்கும் மேலதிகமானவர்கள் கடந்த தசாப்தங்களில் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். இந்நிலைமை தொடர்ந்தால், செழுமையான மொழியையும், கலாச்சாரத்தினையும், நாகரீகத்தினையும், பாரம்பரியத்தினையும் கொண்ட தமிழ் மக்கள் இலங்கையில் இல்லாமல் போய்விடுவார்கள்.

தமிழ் மக்கள் தமது பூர்வீகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஒன்றிணைந்த பிரிவுபடாத இலங்கையில், அர்த்தமுள்ள அதிகார பிரயோகத்துடன் தொடர்ந்தும் வாழ விரும்புகிறார்கள். இது உறுதி செய்யப்படவேண்டியது அடிப்படையாகும். தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இந்த நிலைமைக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே காரணம் என கூறுகின்றனர்.

ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மக்களிற்கெதிரான கலவரங்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால், தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் பாதுகாத்திருந்தால், இலங்கை பிரதமர்களிற்கிடையிலும் தமிழ் தலைவர்களிற்கிடையிலும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், தமிழ் மக்களின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோன்றியிருக்கமாட்டார்கள் என்பதனை குறிப்பிட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இது தொடர்பில் ஒரு பொறுப்பு உள்ளது. சமாதானமும், மீளநிகழாமையும் இந்த விடயங்கள் யதார்த்தமாகத் தீர்க்கப்படவேண்டும் என வலியுறுத்துகின்றன” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!