பசிலை ஆட்டுவிக்கிறார் ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதன் காரணமாகவே டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவாகப் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்திருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

    
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை 08 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 200 ரூபா என்ற மட்டத்தில் பேணுவதால் நாட்டிற்கு எவ்வித நன்மையும் கிட்டப்போவதில்லை. மாறாக வெளிநாடுகளில் பணிபுரிவோர் நாட்டிற்கு அனுப்பும் பணம் அனுப்பும் வீதம் குறைவடையும் என்று கூறினோம்.
அதுமாத்திரமன்றி உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் அதன்மூலம் பெற்ற வருமானத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டு வைத்திருப்பதாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறு டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 200 ரூபாவாகப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைக்குப் பொருத்தமற்ற செயற்பாடுகளின் விளைவாக கடந்த 6 மாதகாலத்தில் சுமார் ஒன்றரை பில்லியன் ரூபா நட்டமேற்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவாக மத்திய வங்கி தீர்மானித்திருக்கின்றது. அதேவேளை வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கு, ஒரு டொலருக்கான ஊக்குவிப்புத்தொகையாக வழங்கப்பட்டுவந்த 10 ரூபாவை 38 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே டொலர் ஒன்றுக்காகச் செலுத்தப்படும் 230 ரூபா என்பது மேற்குறிப்பிட்ட 38 ரூபா ஊக்குவிப்புத்தொகையையும் உள்ளடக்கியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெளிநாட்டுச்சந்தை செயற்பாடுகள் மற்றும் கொடுக்கல், வாங்கல்கள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இவ்விடயத்தில் நெருக்கடிகளைக் குறைப்பதற்கு ஏதுவான வழிமுறைகளை கடந்தகாலத்திலிருந்து நாம் தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்றோம். இருப்பினும் அரசாங்கம் அதனை செவிமடுக்கவில்லை. இப்போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பசில் ராஜபக்ஷ தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.

அதன்போது இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கவேண்டுமானால், ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடையச்செய்யவேண்டும் என்று விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனவே எமது நாட்டு ரூபாவின் பெறுமதியை ஜெய்சங்கரே தீர்மானிக்கின்றார்.

ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்பட்டிருக்காது.
எவ்வித ஒருங்கிணைவும் முன்னேற்பாடுகளுமற்ற இந்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களின் விளைவாகவே நாடு இத்தகைய பாரதூரமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!