கொடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் இன்று விசாரணை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 24-4-2017 அன்று காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
    
இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

மேல் விசாரணை
மேலும் கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தனிப்படையினர் எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.
இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியிடம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் வைத்து 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். மறுநாள் அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கோவை மாவட்ட அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் அனுபவ் ரவியிடம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு டிரைவர் கனகராஜ் பேசியதாக தெரிகிறது. எனவே அவரிடம் கடந்த 18-ந் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

சசிகலாவிடம் இன்று விசாரணை
இதற்கிடையே ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (வியாழக்கிழமை) மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

அப்போது சசிகலா, கொடநாடு வழக்கு தொடர்பாக தனக்கு தெரிந்த தகவல்களை கூறுவார் என்று கருதுவதாக போலீசார் தெரிவித்தனர். சசிகலாவிடம் விசாரணை நடத்த ஜ.ஜி. தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னைக்கு புறப்பட்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
     

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!