கபடி போட்டியின் போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து இறந்த இளைஞன்!

தமிழகத்தில் கபடி போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர் மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் கடலூரில், பண்ருட்டி அருகே மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கபடி குழு சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி கடந்த 23-ஆம் திகதி தொடங்கியது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்றன.
    
ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போட்டியில் பெரியபுறங்கணியும், கீழகுப்பம் அணியும் மோதின. இதில் பெரியபுறங்கணி அணிக்காக அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் சஞ்சய் என்கிற விமல்ராஜ் (வயது 22) என்பவர் கலந்து கொண்டு விளையாடினார்.

போட்டியின் பரபரப்பான கட்டத்தில் விமல்ராஜ் ரெய்டு சென்றார். அவரை எதிர் அணியினர் பிடிக்க முயன்றனர். அவர்களிடம் பிடிபடாமல் இருக்க துள்ளி குதித்து தாவினார் விமல்ராஜ்.

அப்போது கீழே விழுந்த அவரை, எதிர் அணியை சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் மடக்கினார். அப்போது அவரது கால், விமல்ராஜின் தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் இருந்தது.

உடனே விமல்ராஜ் எழுந்திருக்க முயன்றார். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியாமல் திடீரென சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விமல்ராஜ் ஏற்கெனெவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பண்ருட்டி பொலிஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கபடி போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு, உயிரிழந்த வீரரின் உடலுக்கு கல்லூரி மாணவர்கள், கபடி வீரர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!