தலைவர் பதவியை ஏற்க தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கும் ராகுல் காந்தி!

கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். அவரை பதவியில் நீடிக்குமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி வற்புறுத்திய போதிலும் அவர் ஏற்கவில்லை. அதையடுத்து, இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம், அதிருப்தி தலைவர்கள் 23 பேர், கீழ்மட்டத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் பதவிவரை உட்கட்சி தேர்தல் நடத்துமாறு சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினர்.

பின்னர், கடந்த ஆண்டு, காங்கிரஸ் காரிய கமிட்டி, உட்கட்சி தேர்தல் அட்டவணை வெளியிட்டது. அதன்படி, கீழ்மட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. காங்கிரஸ் தலைவர் தேர்தல், ஆகஸ்டு 21-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று காரிய கமிட்டி அறிவித்து இருந்தது. இந்தநிலையில், காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:- திட்டமிட்டபடி செப்டம்பர் 20-ந் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும். சரியான தேதியை காரிய கமிட்டி முடிவு செய்து அறிவிக்கும். இதற்காக விரைவில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும். அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அதே சமயத்தில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல்காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

அவர் அப்பதவியை ஏற்க ஆர்வமின்றி இருப்பதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர் மறுத்தபோதிலும், அவர்தான் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நேரு குடும்பத்தை சாராத வேறு நிர்வாகிகளை தலைவர் பதவியில் நியமிக்க முறையான ஆலோசனை எதுவும் நடக்கவில்லை.

இந்த குழப்பநிலைக்கு முடிவு கட்ட சோனியாகாந்தியே தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று சில தலைவர்கள் யோசனை தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில், தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது என்பதை ஜி-23 குழுவை சேர்ந்த அதிருப்தி தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!