குரக்கன் சால்வை தலைவர்கள் தப்பிக்க இடமளிக்க முடியாது-எரான் விக்ரமரத்ன

அடக்கியாள வேண்டியது போராட்டம் நடத்திய மக்களை அல்ல எனவும் பணவீக்கத்தையே அடக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.பைலா பாடி சுவையான கதைகளை முன்வைத்து நாட்டை மீட்டெடுக்க முடியாது. பைலா பாடி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்ற நிதியமைச்சரிடம் மண்டியிட்டு பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
இவர்கள் சுயாதீனமாக சிந்திக்கவும் நினைக்கவும் தெரியாதவர்கள். மாத சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் வறிய மக்களுக்கு அதன் மூலம் 10 முட்டைகளை கூட கொள்வனவு செய்ய முடியாது.

நாட்டின் செல்வத்தை கொள்ளையிட்ட கொள்ளையர்களை அடக்குவதற்கான திட்டம் இருக்க வேண்டும். எங்களிடம் அதற்கான வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. திருடர்களை பாதுகாக்கும் திட்டங்களை வகுத்து நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்ற பஞ்ச மகா குரக்கன் சால்வை அணிந்த தலைவர்கள்(ராஜபக்சவினர்) தப்பிக்க இடமளிக்க முடியாது. சந்தர்ப்பவாத அரசியலுக்கு எந்த உதவியையும் வழங்குவதில்லை எனவும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!