மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொடுத்த மாகாண சபையைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு குறித்துப் பேசுவதற்கு அருகதையற்றவர். என்று முன்னாள் அமைச்சரும் ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அழிவடைகின்றது என்று கவலைப்படும் சம்பந்தன் கூட்டாட்சிக் கட்சி அழித்ததை மறந்துவிட்டாரா? சுதந்திரக் கட்சியின் தேவையை அன்று உணர்ந்த பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். சுதந்திரக் கட்சி தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாதன் காரணமாக நாங்கள் சிறிலங்கா பொது மக்கள் முன்னணியை உருவாக்கி அந்த நோக்கத்தை அடைந்து வருகின்றோம்.
வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். எமது கட்சியானது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்து செயற்பட்டு வருகின்றது. நல்லாட்சி அரசுடன் இணைந்து செயற்படும் சம்பந்தன் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்தார் என்று கேட்கின்றோம். சம்பந்தன் போன்ற தலைவர்களை நம்பிய வடக்கு கிழக்கு மக்கள் இன்று ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எமது காலத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு எவ்வளவு சேவை செய்துள்ளோம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று அவ்வாறான அபிவிருத்திகள் வடக்கில் இடம்பெறுகின்றனவா? மாறாக வடக்கு மக்களின் பிரச்சினை எதுவும் தீர்க்கப்படாமல் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மீதான அதிருப்தி கடந்த தேர்தலில் வெளிக்காட்டப்பட்டது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை அரசு பிற்போட்டு வந்தது. நாம் போராடி அந்தத் தேர்தலைப் பெற்றோம். இப்போது மாகாண சபைத் தேர்தலையும் பிற்போட்டு வருகின்றனர். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைபோகின்றது. தேர்தலை பிற்போடும் அரசின் முயற்சிக்கு சம்பந்தன் ஆதரவு வழங்கி வருகின்றார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மாகாண சபைகளை மகிந்த ராஜபக்சவே மீண்டும் நிறுவினார். ஆனால் இன்று கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அதேபோன்று வடக்கு மாகாணசபையும் சில தினங்களில் கலைக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. நாம் பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றுக்கொடுத்த மாகாண சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இழந்து வருகின்றது என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!